கந்தளாய் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் தாக்குதல் : படையினர் நால்வர் பலி

திருகோணமலை கந்தளாய் உள்ள காவலரண் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை கந்தளாய் பகுதியில் உள்ள சேரநாவ பகுதியில் அமைந்துள்ள காவலரனே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இதில் சிறீலங்காப் படையினரும், சிறீலங்கா ஊர்காவல் படையினரும் காவல்கடமையில் ஈடுபட்ட போது இக்காவலரண் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. இதன்போது நான்கு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுத தளபாடங்ளும் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன.

ரி56 ரக துப்பாக்கி 01
அதற்குரிய ரவைகள் 30
சொட் கண் 01

ஆகிய விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்

வன்னேரிக்குளம், ஆன்டான்குளத்தில் படையினர் ஐவர் பலி, 19 பேர் காயம்

கிளிநொச்சி வன்னேரிக்குளம், மற்றும் ஆன்டான்குளம் பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மோதல்களில் தமது தரப்பில் படை அதிகாரி ஒருவர் உட்பட படையினர் ஐந்து பேர் கொல்லப்பட்டிருப்பதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.


இதன்போது மேலும் 19 படையினர் காயமடைந்திருப்பதாகவும் அறிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, இந்தப் பகுதிகளில் நேற்று கடும் மோதல்கள் இடம்பெற்றதாகக் கூறியுள்ளது.


இதேவேளை, வன்னேரிக்குளம் மேற்கு களமுனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக, விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுக்குத் திரும்புவது மாத்திரம் போதாது: கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்


விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புவது மாத்திரம் இனப்பிரச்சினைத் தீர்வுக்குப் போதுமானதாக அமையாது என கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் பொப் ரே கூறியுள்ளார்.

“வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஆழமான அர்ப்பணிப்பு இல்லாமை மற்றும் ஜனநாயகப் பகிர்வு தொடர்பாக ஒரு அர்ப்பணிப்பு இல்லாமை போன்ற காரணங்களே 2001ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் இல்லாமல் போவதற்குக் காரணமாக அமைந்தன. இதுவே இரண்டு தரப்பிற்கும் பிரச்சினையை உருவாக்கியது” என அவர் குறிப்பிட்டார்.

இரு தரப்புக்கும் இடையில் மீண்டும் மோதல்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்ததுடன், பலர் கொல்லப்பட்டதாகவும், இந்த நிலையில் சுதந்திரமான கண்காணிப்பாளர்களை மீண்டும் வரவழைத்து இரு தரப்புக்குமிடையில் புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவது கடினமானது எனவும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

சம அந்தஸ்து, புதிய முறையிலான சுதந்திரம், அதிகாரப் பகிர்வுகொண்ட ஆட்சிமுறை போன்றவற்றை உள்ளடக்கிய தீர்வுமுறைபற்றியே இலங்கை அரசாங்கம் தற்பொழுது கவனம் செலுத்தவேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். படுகொலைகள், ஊழல்மோசடிகள், பொருளாதார வீழ்ச்சி போன்றவற்றுக்கு மாற்றீடு தேடவேண்டிய சூழல் இலங்கைக்கு உருவாகியிருப்பதாக கனடா தெரிவித்துள்ளது.

“இந்த விடயத்தில் கனடா அக்கறை செலுத்தாமல் இருக்கமுடியாது, எனெனில், சமஷ்டி, முரண்பாட்டுத் தவிர்ப்பு மற்றும் பல்லினத்தன்மை தொடர்பான விடயங்களில் கனடாவுக்கு சொந்த அனுபவங்கள் இருக்கிறது. எனவே, இந்த விடயத்தில் கனடா கூடுதலான அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும்” என அவர் கூறினார்.

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் இடையில் தற்பொழுது அதிகரித்திருக்கும் மோதல்களால் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனச் சுட்டிக்காட்டியிருக்கும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர், இரு தரப்புக்கும் இடையிலான மோதல்களில் இதுவரை 75,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் இனப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர அதிகாரப்பகிரலுடனான ஆட்சிமுறை அவசியம் - கனடா

இலங்கையின் இனப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமானால் பரஸ்பர மரியாதை, அதிகாரப்பகிரலுடனான ஆட்சிமுறை, அசாதாரணமான திடசங்கற்பம் என்பன அவசியமாகிறது என கனேடிய லிபரல் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் பொப்ரே தெரிவித்துள்ளார்.

இதற்காக இலங்கையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையைத் தீர்த்து பகைமையை களைய கனடாவினால் முயற்சிகளை மேற்கொள்ளமுடியும் எனவும் சுட்டிக் காட்டி உள்ளார்.


இலங்கையின் யுத்தம் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவித்த அவர், தன்னார்வு நிறுவனங்களுக்குப் பாதுகாப்பை வழங்கமுடியாது என்ற அடிப்படையில் அவர்களை யுத்தம் இடம்பெறும் பிரதேசங்களில் இருந்து வெளியேற்றியமையில் இருந்து இதனைத் தெளிவாவதாக புரிந்து கொள்ள முடியும் எனவும்; குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், தற்போது ஏற்பட்டு இருக்கும் இக்கட்டான நிலைமையை பேச்சுவார்த்தை ஒன்றின் மூலமே கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார். எனினும் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக சுயாதீனமான கண்காணிப்புக் குழு ஒன்றின் ஊடாக நம்பிக்கை கட்டியெழுப்பப்படவேண்டியது அவசியம் என்பதனை போப் ரே சுட்டிக்காட்டியுள்ளார்.

நிவாரணப் பணியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களைப் பொறுத்தமாட்டில் உலகின் மிக அபாயகரமான நாடுகளின் பட்டியலில் ஐக்கிய நாடுகள் அமைப்பு அண்மையில் இலங்கையின் பெயரையும் இணைத்துள்ளது. இந்த நிலைமை ஆரோக்கியமான நிலைமையாக கருதப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் ஜனநாயக சூழ்நிலை குறித்து சர்வதேச ரீதியில் பல்வேறு விமர்சனங்கள் அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள், சட்டம் ஒழுங்கு நிலைமை போன்றவை தொடர்பாக கனடா கவனம் செலுத்த வேண்டும் என லிபரல் கட்சி சார்பில் பொப் ரே கோரிக்கை விடுத்துள்ளார்.

அதனால் இலங்கையில் போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கான முனைப்புகள் உடனடியாக எடுக்கப்படல் வேண்டும். அத்துடன் நாடாளுமன்ற ஜனநாயகம், மனித உரிமைகள் காப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதனையே கனடா எதிர்ப்பார்க்கிறது.

இதனை விடுத்து 10 ஆயிரம் கிலோமீற்றர் அப்பாலில் இருந்துகொண்டு கனடா இந்தப்பிரச்சினையில் பங்காளியாக இருக்கவோ அல்லது விரலை சுட்டிக்காட்டிக் கொண்டிருப்பதையோ விரும்பவில்லை என்றும் கனேடிய வெளியுறவு அமைச்சர் போப் ரே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளர் அப்பதவியில் இருக்கத் தகுதி அற்றவர் - பிரதம நீதியரசர்


குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளரின் ஊழல் நடத்தை மற்றும் மக்களின் உரிமை மீறல் தொடர்பாக அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பணிப்பாளர் பதவியில் இருக்க அவர் தகுதியற்றவர் என்றும் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உத்தரவிட்டுள்ளார்.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவருமான வாசுதேவ நாணயக்கார மற்றும் நிஹால் அமரசேகர ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரின் நடவடிக்கைகள் தொடர்பில் பிரதம நீதியரசர் இந்தக் கடுமையான விமாசனத்தை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இருந்து காலிமுகத்திடல் வரையுள்ள அனைத்து வீதி தடைகளையும் அகற்றுமாறு பிரதம நீதியரசர் சரத் என் சில்வா நேற்று (29) உத்தரவிட்டிருந்தார். மக்கள் சுதந்திரமாக பயணம் செய்யும் வகையில் இந்த வீதி தடைகளை அகற்றுமாறு நீதியரசர் காவற்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பொதுப் போக்குவரத்துக்களை இலகுவாக மேற்கொள்ளும் நோக்கில் டுப்ளிகேஷன் வீதியூடான ஒரு வழிபாதை போக்குவரத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு அவர் பணித்துள்ளார். இதேவேளை வாகன நிறுத்த தடைத் தொடர்பான அறிவிப்பு பலகைகளை கொழும்பு நகரில் பொருத்துமாறும் கொழும்பு மாநகர சபைக்கு நீதியரசர் உத்தரவுபிறப்பித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை ஆராய்ந்த போதே நீதியரசர் சரத் என் சில்வா இந்த உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். அண்மைய நாட்களில் நீதியரசர் சரத் என் சில்வா தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய பல்வேறு உயர்நீதிமன்ற தீர்ப்புகளை வழங்கிவருகிறார். இதனால் அவர் அதிகார தரப்பினரின் வெறுப்பிற்கு ஆளாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எவ்வாறெனினும் 2008 ஆம் ஆண்டு இறுதியுடன் அவர் ஓய்வு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ்க் காவற்துறையினருக்கு இந்தியாவில் விசேட பயிற்சி?

இந்தியாவின் புதுடெல்லி காவற்துறைப் பயிற்சி மையத்தில் பயிற்சிகளை நிறைவு செய்த தமிழ்க் காவற்துறை அணி ஒன்று ஓரிரு தினங்களில் இலங்கை திரும்பவுள்ளதாக கிழக்கு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு அரசாங்க கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்ட பின்னர் 2007ஆம் ஆணடு தனியே தமிழர்களைக் கொண்ட காவற்துறை அணி ஒன்று உருவாக்கப்பட்டது.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையில் 90க்கும் மேற்பட்ட பெண்களும் 100க்கும் மேற்பட்ட ஆண்களும் தேர்வு செய்யப்பட்டு கல்லடி பயிற்சி முகாமில் 6 மாதகால பயிற்சி வழங்கப்பட்டபின்; கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி புதிய பதவிநிலைகளைப் பெற்று கடமைகளைப் பொறுப்பேற்றனர்.

இவர்கள் இங்கு நிர்வாகப்பயிற்சிகளை மட்டுமே நிறைவு செய்த காரணத்தால் நிர்வாகக் கடமைகளுக்கு மட்டுமே பயன்படுத்த நேரிட்டது. பாட வரையறையில் 8ம் ஆண்டு வரையே படித்தவர்களாக இருந்தால் ஆண்களில் 50க்கும் மேற்பட்டவர்களைத் தேர்ந்து அவர்கள் இந்தியாவில் உள்ள புது டில்லி பயிற்சி முகாமில் ஆயுதப்பயிற்சி பெற்றுக் கொள்வதற்காக அனுப்பிவைக்கப்படடதாக தெரியவருகிறது. இவர்கள் இன்னும் ஓரிரு தினங்களிள் இலங்கைக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வன்னியில் விமானப் படையினர் புதிய வகை எரிகுண்டுகளை வீசுகின்றனர்

வன்னிப் போர்முனையில் தற்போது விமானப் படையினர் புதிய வகை எரிகுண்டுகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

கடந்த இரண்டு மாதங்களாக நாச்சிக்குடா தொடக்கம் அக்கராயன் வரையிலுமான களமுனைகளில் கடுமையான எதிர்த் தாக்குதல்களை சந்தித்து வருகின்ற படையினரின் முன் நகர்வுகள் மந்த நிலையை அடைந்து வருவதனைத் தொடர்ந்து அரசு புதிய வகையான திரவ எரிகுண்டுகளை விமானப்படை விமானங்கள் மூலம் வன்னிப்பெரு நிலப்பரப்பில் வீசத் தொடங்கியுள்ளது.

விமானப் படை கடந்தவாரம் இத்தகைய குண்டுகளை கிளிநொச்சி மற்றும் அக்கராயன் களமுனைகளை அண்டிய பகுதிகளில் வீசியுள்ளது. இக்குண்டுகளினால் ஏற்பட்ட தாக்கங்கள் தொடர்பாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

விமானத்திலிருந்து வீசப்படும் இக்குண்டுகள் தரையில் மோதி வெடித்ததும் பாரிய நெருப்புக் கோளங்களை உருவாக்குவதுடன் வெடிக்கும் சுற்றாடலில் இருந்து வாயுக்களையும் அகற்றும் தன்மை கொண்டது. எனவே, அப்பகுதியில் வசிப்பவர்கள் மூச்சுத்திணறி உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்படும்.

தாக்குதல் நடத்தப்பட்டதும் ஒருவர் உயிரிழக்காவிட்டாலும் பாரிய பதுங்கு குழிகளுக்கு வெளியில் இந்தக் குண்டுகள் வீழ்ந்து வெடித்தால் பதுங்கு குழிகளினுள் இருப்பவர்களின் சுவாசப் பையினுள்ளி ருக்கும் ஒட்சிசனைக் கூட உறிஞ்சி வெளியேற்றிவிடுமென்பதால் அவர் மரணமடையும் நிலையேற்படும்

சனிக்கிழமை கிளிநொச்சியில் வீசப்பட்ட விமானக் குண்டுகளால் எண்மர் பலத்த எரிகாயங்களுக்குள்ளாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் குழந்தைகளும் அடங்கும்.

நான்காவது ஈழப்போரில் விமானப்படை, பதுங்குகுழிகளை தகர்க்கும் கனரக குண்டுகளைப் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது எரி குண்டுகளை பயன்படுத்த தொடங்கியுள்ளது.

அக்கராயன் மற்றும் வவுனிக்குளம் பகுதிகளில் முன் நகர்வில் ஈடுபட்ட படையினர் மீது விடுதலைப்புலிகள் "சி.எஸ்.' எனப்படும் நச்சுவாயுவைப் பயன்படுத்தியதாக அரசு பிரசாரங்களை கட்டவிழ்த்து விட்ட சில நாட்களில் எரிகுண்டுகளை வன்னிப்பெரு நிலப்பரப்பின் மீது விமானப்படை விமானங்கள் வீசத் தொடங்கியுள்ளதானது பலத்த சந்தேகங்களை தோற்றுவித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இராஜதந்திர அழுத்தங்களால் அரசு தனது நிலைப்பாட்டைத் தளர்த்தியது! வன்னிக்கு மீண்டும் ஐ.நா.உணவு லொறிகள்


ஐ.நா.உட்பட எந்தச் சர்வதேச அமைப்புகளோ, அவற்றின் பிரதிநிதிகளோ வன்னிப்பக்கம் செல்ல அனுமதிக்க முடியாது என்று முரண்டு பிடித்துக்கொண்டிருந்த இலங்கை அரசு, உலகின் பல்வேறு பக்கங்களிலும் இருந்து வந்த இராஜதந்திர அழுத்தங்களால் தனது நிலைப்பாட்டைச் சற்றுத் தளர்த்தி, ஐ.நாவின் கண்காணிப்புடன் வழித் துணையுடன் உணவு லொறிகளை வன்னிக்குள் அனுப்ப இணங்கியிருக்கின்றது.
அதனைத் தொடர்ந்து வன்னியில் யுத்த நெருக்கடிகளில் சிக்கியுள்ள மக்களுக்கான உணவு விநியோகத்தை ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் ஆரம்பிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக உலக உணவுத் திட்டத்தின் அனுசரணையுடன் 60 உணவு லொறிகள் எதிர்வரும் வியாழக்கிழமை வன்னிக்குச் செல்கின்றன.
உணவு லொறிகளுடன் வன்னி செல்லும் கண்காணிப்பாளர்கள் அங்கு தங்கியிருந்துவிடாமல் பொருள்களை விநியோகித்துவிட்டு உடனடியாகத் திரும்பி வந்துவிடவேண்டும் என்றும் அறிவித்திருக்கின்றது.
வன்னியிலிருந்து சர்வதேச மனிதாபிமான அமைப்புகளை வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்த அரசு, மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான கட்டமைப்பு பலம் தன்னிடமுள்ளதாகத் தெரிவித்து வந்தது.
அண்மையில் நியூயோர்க்கில் நோர்வேயின் பிரதிநிதிகளைச் சந்தித்த ஜனாதிபதி எதிர்காலத்தில் அரசினூடாக மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையும் உத்தரவாதம்
எனினும் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் உட்பட மனிதாபிமான உதவிகளை அரச அதிபர்களிடமும் அவர்களது பிரதிநிதிகளிடமும் வழங்குவது குறித்து மனிதாபிமான அமைப்புகள் அதிருப்தி வெளியிட்டதுடன் மனிதாபிமான உதவி பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைவதற்கான உத்தரவாதம் வழங்கப்படவேண்டுமெனக் கோரியிருந்தன.
இதனை அடிப்படையாக வைத்து சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற அமைப்புகளின் கண்காணிப்பாளர்கள் அங்கு பிரசன்னமாகியிருப்பதற்கு அரசு அனுமதியளிக்கவேண்டுமென்றும் கோரப்பட்டது.
இந்த விடயத்தில் அரசு எதிர்கொண்ட சர்வதேச இராஜதந்திர அழுத்தங்கள் காரணமாக மனிதாபிமான உதவிகளை எடுத்துச் செல்லும் வாகனத் தொடரணியுடன் சர்வதேச கண்காணிப்பாளர்கள் செல்வதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை அத்தியாவசிய உணவுப் பொருள்களுடன் 60 லொறிகள் வன்னிக்குச் செல்லவுள்ளன என்று உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான தலைவர் முகமட் சலிகீன் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். சர்வதேச கண்காணிப்பாளர்களின் வழித்துணையுடன் அடுத்தவாரம் வாகனத் தொடரணிகள் வன்னி செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விநியோகங்களை மேற்பார்வை செய்வதற்காக சர்வதேசப் பணியாளர்கள் வன்னிக்குச் செல்வதற்கும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் காலங்களில் வன்னிக்குச் செல்லவுள்ள பல வாகனத் தொடரணிகளுக்கான ஆரம்பமாக இது அமையும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வன்னியிலிருந்து சர்வதேச மனிதாபிமானப் பணியாளர்கள் வெளியேறி இரண்டு வாரங்களின் பின்னர் மீண்டும் உணவுப் பொருள்கள் அங்கு அனுப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் வன்னிக்கு உணவு விநியோகம் இடம்பெறவுள்ளமை, தீவிரமடைந்து வரும் மோதலில் சிக்கியுள்ள வன்னி மக்களை ஐக்கிய நாடுகள் மறந்து விடவில்லை என்பதைப் புலப்படுத்துவதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் பேச்சாளர் கோர்டென் வைஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நியூயோர்க்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கி மூன் சந்தித்தவேளை வன்னி மக்களின் நிலைமை குறித்து ஐ.நா. செயலர் கடும் கவலை வெளியிட்டார் என்றும் இதனையடுத்தே அரசு கட்டுப்பாடுகளைத் தளர்த்த முன்வந்ததாகவும் ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது.

நோர்வேயில் மாபெரும் கவனயீர்ப்பு நடவடிக்கை


தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரச படைகளின் தாக்குதலைகளைக் கண்டித்து, நோர்வேயில் அடையாள உண்ணாநிலை, மற்றும் கவனயீர்ப்புப் போராட்டம் என்பன முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தப் போராட்டங்கள் இன்று திங்கட்கிழமை காலை 8:00 மணிக்கு ஆரம்பித்துள்ளதாக, ஐரோப்பிய தொலைக்காட்சியின் நோர்வே செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


நோர்வே நாடாளுமன்ற முன்றலில் ஆரம்பித்துள்ள இந்தப் போராட்டம் நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:00 மணி வரை 32 மணித்தியாலங்கள் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.


தமிழீழ மக்களின் மனித அவலத்தை அறிந்திருந்தும், பாராமுகமாய் இருக்கும் உலகின் மனச்சாட்சியை கேள்வி கேட்கும் முகமாக இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது.

.

நோர்வே நாடாளமன்றத்திற்கு முன்பாக இன்று காலை 8.00 மணிக்கு தொடங்கிய அடையாள உண்ணா நிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு போரட்டமும் நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி வரை தொடரவுள்ளது.

பெரியவர்கள் பெண்கள் என 20 வரையான தமிழீ உறவுகள் காலை 8.00 மணியிலிருந்து அடையாள உண்ணா நிலையை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக, நுற்றுக்கனக்கான நோர்வே வாழ் தமிழீழ மக்கள் நோர்வே நாடாளமன்றம் முன்பாக அணி திரண்டுள்ளனர்.

நாளை 10மணி முதல் 15 மணி வரை உண்ணாநிலைப் போராட்டத்துடன் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் அதே இடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. நாளைய போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அணிதிரண்டு தமிழீழ மக்களின் அவலத்தை வெளிப்படுத்தி, அவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவான தமது ஒன்றுபட்ட குரலை வெளிப்படுத்தவுள்ளனர் என நோர்வே தமிழ் அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.



காத்தான்குடியில் கைக்குண்டுத்தாக்குதலில் சிறுவர்கள் காயம்.

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் 7 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேர் காயம் அடைந்துள்ளனர். நேற்று பிற்பகல் இந்தக் கைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலைநேர பிரார்த்தனையில் ஈடுபட்ட முஸ்லீம்களே இந்த கைக்குண்டுத் தாக்குதலின் இலக்கு எனக் கூறப்படுகிறது. காயம் அடைந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காத்தான்குடியில் தற்போது பதட்டம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிஙறது.

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் உள்ள ஜெய்ன் மெத்தப் பள்ளிவாசல் முன்பாக அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறார்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர்.

காத்தான்குடி நகரில் உள்ள மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் அமைந்திருக்கும் ஜெய்ன் மெத்தப் பள்ளிவாசல் முன்பாக இக்கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்களே கைக்குண்டுகள் இரண்டினை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இத்தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். ஆறு பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இரண்டு உந்துருளிகளும் சேதமாகியுள்ளன.

காயமடைந்த அனைவரும் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் இனப்பிரச்சினை என்பது தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினையாகும்.

இலங்கைக்கு, பாகிஸ்தானும் சீனாவும் தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இதனூடாக இந்தியாவுக்கு எதிராக மறைமுகமாக ஒரு நிழல் யுத்தத்தை அவை நடாத்துகின்றன என மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தமிழ் நாட்டில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினை என்பது தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினையாகும். ஆனால் அதனை விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையது என்று கருதுவது துரதிர்ஸ்டவசமானது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு, தமிழ் மொழிக்கு எதுவித அந்தஸ்தும் வழங்கப்படவில்லை. இலங்கையில் அரச படையின் மனித உரிமை மீறல்களால் இதுவரை 75ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 20ஆயிரம் விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போய்விட்டனர்.

தமிழ் மக்களின் பிரதேசங்களில் கட்டம் கட்டமாக சிங்கள மக்களைக் கொண்டு சென்று அரசு குடியேற்றுகிறது. சொந்த நாட்டிலேயே தமிழ் மக்கள் இடம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

இலங்கை அரசுக்கு சீனாவும் பாகிஸ்தானும் தொடர்ந்து ஆயுதங்களையும் இராணுவ உதவிகளையும் தாராளமாக வழங்கி வருகின்றன. இலங்கையில் தங்களது நிலைகளை வலுப்படுத்தவே இவ்விரு நாடுகளும் விரும்புகின்றன. போர் ஓய்வதையோ அமைதி ஏற்படுவதையோ அவை விரும்பவில்லை.. இந்தியாவுக்கெதிரான நிழல்யுத்தத்தை இவ்விரு நாடுகளும் நடாத்துகின்றன.

எனவே பாகிஸ்தானுக்குப் பதிலாக இந்தியா இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கக் கூடாது. அதிகாரப்பகிர்வுத் திட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. தமிழ் ஈழம் என்பது புலிகளின் கோரிக்கையாக இருக்கலாம் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டுமெனில் தமிழ்நாட்டைப்போல மொழிவாரி மாநிலத்தை அமைக்க இலங்கை அரசு முன்வர வேண்டும். இல்லையேல் நாடு பிளவுபடுவதைத் தவிர்க்க இயலாது. சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் இலங்கைப் பாராளுமன்றில் மலையக மக்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மங்களவுக்கு பிறந்துள்ள ஞானம் - சர்வதேசத்தை ஏமாற்றவே சர்வகட்சி குழுவாம்.


இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவானது சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு புகைமண்டலம் என இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

டெய்லி மிறர் பத்திரிகையின் ஊடகவியலாளர் சகுந்தலா பெரேராவுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மங்கள சமரவீர இவ்வாறு கூறியிருந்தார்.
“சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு உருவாக்கப்பட்டபோது அதில் நானும் ஒரு பங்குதாரராக இருந்ததால் அது ஏன் உருவாக்கப்பட்டது என்பதை நான் கூறுகின்றேன். சர்வதேசத்தை பிழையாக வழிநடத்துவதற்கே இது உருவாக்கப்பட்டது. சர்வதேச சமூகத்திடம் அனைத்தையும் முடிமறைக்கும் ஒரு புகைமண்டலமே இந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு. இதற்கு சிறந்த உதாரணம், 2006ஆம் ஆண்டு அரசாங்கத்தின் பிரதிநிதியாக நான் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது நடைபெற்ற சம்பவத்தைக் கூறலாம். கலாநிதி. ரோஹான் பெரேரா இந்தியத் தலைவர்களுக்கு விளக்கமளித்து அவர்கள் கவரப்பட்டிருந்தனர். ஆனால், நாங்கள் நாடு திரும்பியதும் மேலதிகமான அதிகாரங்கள் தேவையென பெரேரா முழங்கியிருந்தார். சார்க் மாநாடு நடத்தப்படும்போது அல்லது அரசாங்கக் குழுவினர் அமெரிக்கா செல்லும்போது சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தெரியும் பொருளாக இருக்கும். இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வொவை மாத்திரமே இந்த அரசாங்கம் விரும்புகிறது” என மங்கள சமரவீர தெரிவித்தார்.

அதிகாரங்களைப் பகிரும் அரசியலமைப்பே சிறந்த ஆயுதம்

விடுதலைப் புலிகளுடனான மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் கடந்த காலங்களில் பலதடவைகள் கிளிநொச்சி அரசாங்கப் படைகளால் மீட்கப்பட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டிய மங்கள சமரவீர, இராணுவத்தினரின் சிறந்த செயற்பாட்டாலேயே இவற்றை முன்னெடுக்க முடிந்ததாகக் கூறினார். எனினும், அவ்வாறு மீட்கப்பட்ட பகுதிகள் மீண்டும் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டிருந்ததாகவும், இவ்வாறு மாறி மாறி மோதல்கள் தொடரும் எனவும் அவர் கூறினார்.

எனவே, இவ்வாறு தொடர்ச்சியாக நீண்டுவரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அரசியல் ரீதியான தீர்வொன்றே சிறந்த வழி எனக் குறிப்பிட்ட மங்கள சமரவீர, “சிறுபான்மையினருக்கு நேர்மையாக அதிகாரங்களைப் பகிர்ந்துகொடுக்கும் அரசியலமைப்பொன்றை முன்வைப்பதே விடுதலைப் புலிகளைக் கையாளக்கூடிய ஒரு சிறந்த வழி. அன்றையதினமே விடுதலைப் புலிகளை முற்றாக அழித்த தினமாக அமையும்” என்றார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி ஏனைய எதிர்க்கட்சிகளை இணைத்து அரசாங்கத்துக்கு எதிரான பாரிய சக்திமிக்க கட்சியொன்றை உருவாக்கவேண்டியதே தற்பொழுது தோன்றியிருக்கும் அவசியமான தேவையனெ மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்

தனது பதவியை தக்க வைக்க ஈழத்தமிழர் விடயத்தில் மெளனம் காத்த கருணாநிதி தமிழக மீனவர் கொல்லப்படும் போதும் பேசாது இருப்பது வேடிக்கை.

பதவியைத் தக்க வைத்துக் கொள்கிற சுயநல நோக்குடன் இலங்கைத் தமிழர் நலனைக் காற்றில் பறக்க விட்டுள்ள முதலமைச்சர் கருணாநிதி இனியாவது தனது தவறை உணர்ந்து இலங்கையிலுள்ள இந்திய இராணுவப் பொறியியலாளர்களை திருப்பியழைக்க மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள பாரதிய ஜனதாக்கட்சியின் பொதுக்குழு இலங்கைத் தமிழருக்கு எதிராக இந்தியா செயற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த சனியன்று (செப்27) சேலத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது அதில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்கெதிராக இந்திய அரசின் செயற்பாடு அமைந்துள்ளது. இப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தான் ஒரே வழி. இராணுவத் தீர்வு சாத்தியமில்லை. இலங்கை இராணுவத்திற்கு உதவும் வகையில் இந்தியாவில் இருந்து இராணுவப் பொறியியலாளர்களை இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது கண்டிக்கத்தக்கது.

இத்தகைய செயலைத் தான் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அரசு செய்துள்ளதைக் கண்டிக்காமல் கருணாநிதி மௌனம் காப்பது கண்டனத்திந்குரியது.

தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள இலங்கைத் தமிழர் நலனைக் காற்றில் பறக்க விட்ட கருணாநிதி இனியாவது தனது தவறை உணர்ந்து இந்திய இராணுவப் பொறியியலாளர்களைத் திரும்பப் பெற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தி தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தி உள்ளது.

வலி.தென்மேற்கு பிரதேசத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம்

யாழ் மாவட்டம் வலிகாமம் தென்மேற்குப் பிரதேசத்தில் மறு அறிவித்தல்வரை இராணுவத்தினர் ஊடரங்குச்சட்டம் பிறப்பித்திருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று முற்பகல் கந்தரோடைப் பகுதியில் இராணுவத்தினருக்கும், பிறிதொரு குழுவினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாகவும், இரு தரப்பிற்குமிடையில் பரஸ்பரம் துப்பாக்கி மோதல்கள் இடம்பெற்றதாகவும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து மாசியப்பிட்டி, கந்தரோடை, சுண்ணாகம், உடுவில், மானிப்பாய், சண்டிலிப்பாய, சங்கானை உள்ளிட்ட பகுதிகளில் பகல் 1 மணிமுதல் மறு அறிவித்தல்வரை ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தொடர்பாக இராணுவத்தினர் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்து வருவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தப் பகுதிகளூடான போக்குவரத்துக்களுக்கு இராணுவத்தினர் தடைவிதித்திருப்பதுடன், பொதுமக்களின் நடமாட்டம் அற்றிருப்பதாகவும் யாழ் பிராந்தியத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து யாழ் நகரின் அன்றாட நடவடிக்கைகள் 12 மணியுடன் குழப்பமடைந்ததாகவும், யாழ் நகரிலிருந்த பெரும்பாலான கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டு பொதுமக்கள் தத்தமது வீடுகளுக்கு விரைந்ததாகவும் தெரியவருகிறது.

தமிழக மீனவரை சுட்டது கடற்படை இல்லையாம், மூன்றாம் தரப்பாம்.. இலங்கை தூதரகம்


தமிழக மீனவர் ஒருவர் நேற்று முன்தினம் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தகவலை இலங்கை மறுத்துள்ளது.

கச்சத்தீவுப் பகுதியில் இவ்வாறான சம்பவம் ஒன்றில் இலங்கைக் கடற்படையினர் ஈடுபடவில்லை என சென்னையில் உள்ள இலங்கையின் உதவி உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை உடனடியாக இலங்கையின் கடற்படையினரின் கவனத்திற்கு கொண்டு வந்தபோது இலங்கைக் கடற்படையினர் குறித்த சம்பவம் தம்மால் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்துள்ளதாகச் சென்னையின் இலங்கை உதவி உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த சம்பவத்திற்கு மூன்றாம் தரப்பு ஒன்று காரணமாக இருக்கலாம் என இலங்கை உதவி உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது

சரத் பொன்சேகாவின் கூற்றுக்கு மாற்றுக் கொள்கைக்கான நிறுவனம் கண்டனம்


இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்ததாகக் கூறப்படும் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்தை மாற்றுக் கொள்கைக்கான நிறுவனம் கண்டித்துள்ளது.

கனடாவின் நெசனல் போஸ்ட் செய்தித்தாளின் ஸ்டுவர்ட் பெல்லுடனான செவ்வியின் போது சரத் பொன்சேகா தமது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். இலங்கை நாடு சிங்களவர்களுக்கு சொந்தமானது. சிங்களவர்கள், இந்தநாட்டில் 75 வீதம் என்ற அளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தேவையற்ற விடயங்கள் தொடர்பில் கோரிக்கை விடுக்கமுடியாது என சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் இவ்வாறான கருத்துக்களை சரத் பொன்சேகா பல்வேறு பொது இடங்களிலும் தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டுள்ள மாற்றுக் கொள்கைக்கான நிறுவனம் நாட்டின் இராணுவத் தளபதி என்ற வகையில் அவர் இவ்வாறான தனிப்பட்ட கருத்தை வெளியிட்டிருக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளது. இது இலங்கையின் ஜனநாயக வலுவையும், இலங்கையின் அரசியலமைப்பையும் மீறும் செயல் என்றும் மாற்றுக் கொள்கைக்கான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பின் கீழ் பணியாற்றுவதையே இராணுவம் கடமையாகக் கொண்டுள்ளது. இதனைத் தவிர தனிப்பட்ட ரீதியில் செயற்படுவதற்கு அதற்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை. இந்தநிலையில் சரத் பொன்சேகாவின் கருத்து இலங்கையின் அரசியலமைப்பை மீறும் செயலாகும். 1961 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவம், முதல் தடவையாக அரசியலமைப்பை மீறும் செயலில் ஈடுபட்டது. அன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இராணுவம் கட்டுப்படுத்த முனைந்தது.

இதேவேளை இராணுவ வீரர் ஒருவர் தெரிவித்துள்ள இந்தக் கருத்தின் மூலம், பாகிஸ்தானின் நிலைமையை இலங்கையில் தோற்றுவிக்கும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்றும் மாற்றுக்கொள்கைக்கான நிறுவனம் கோரியுள்ளது.

இவரின் கருத்து தற்போதைய அரசாங்கத்தின் கருத்திற்கு முற்றிலும் மாறுபட்டது என தெரிவித்துள்ள அந்த நிறுவனம், அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி உரையாற்றியபோது அனைத்துத் தமிழர்களும் புலிகள் அல்ல என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தமையை சுட்டிக் காட்டியுள்ளது.

இந்தநிலையில் இலங்கையில் உரிய நிர்வாக கட்டமைப்பைத் தோற்றுவிக்க அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என மாற்றுக்கொள்கைக்கான நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தியாவின் இரட்டை வேடம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதற்குச் சமன்: வினோநோகராதலிங்கம் எம்.பி


இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் பங்கு இன்றியமையாதது என இருந்த போதிலும் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல இரட்டை வேடம் போடுகின்ற இந்தியாவை நம்பிப் பயன் இல்லை என த.தே.கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

சர்வதேசத்தின் பக்கச்சார்ப்ற்ற தன்மை இலங்கைப் பிரச்சினை தொடர்பில் கடைப்பிடிக்கபட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

யுத்தத்தால் இடம் பெயர்ந்துள்ள அப்பாவிப் பொதுமக்களின் நிலைமைகள் மற்றும் தேசிய, சர்வதேச நடவடிக்ககைள் எவ்வாறு அமைந்துள்ளன எனக் கேட்டதற்குப் பதிலளிக்கையிலேயே வினோ நோகராதலிங்கம எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்

மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது:

தினமும் ஏதிலிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற எமது தமிழ்ச் சமூகம் வாழவே வழியற்றவர்களாக உணவுக்கும் உறங்குவதற்கும் அல்லாடிக் கொண்டிருக்கினறது. இதில் சிறுவர்களினதும் குழந்தைகளினதும் நிலைகள் மிக மிகப் பரிதாபமானதாகும்.

யுத்தத்தின் நடுவில் சிக்கித் தவிக்கும் மக்களின் நிலை குறித்து அலட்டிக் கொள்ளாத சிங்கள அரசு லொறிகளில் உணவு அனுப்புவதாகப் படம் பிடித்து சர்வதேசத்துக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது. வன்னிக்கு அனுப்பப்படுகின்ற உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியத் தேவைகள் பாதிக்கப்பட்டுள்ள மக்களைச் சென்றடையவில்லை. இராணுவத்தினரின் கெடுபிடிகளால் வன்னிக்குள் உணவு லொறி அனுமதிக்கப்படுவதில்லை

சுமார் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழுகின்ற வன்னிப் பிரதேசத்ததக்கு நூற்றுக்காணக்கான லொறிகளில் அத்தியாவசிப் பொருட்களை அனுப்பினாலும் அது போதுமானதாக இருக்காது. ஆனால், அரசு ஐந்தும் பத்தும் என உணவு லொறிகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றது.

அகதிகளை வைத்து ஏமாற்றி அரசியல் செய்து கொண்டிருக்கின்றது சிங்களப் பேரினவாத அரசு.

இலங்கைத் தமிழர் பிரச்சினை மற்றும் வன்னி நிலைவரங்கள் குறித்து சர்வதேச பிரதிநிதிகள் பக்கச்சார்பு காட்ட வேண்டாம் என்று த.தே.கூட்டமைப்பினா கேட்டுக் கொள்கிறது. ஏனெனில் அண்மைக்காலமாக யுத்த நிலைவரம் தொடர்பில் இங்கு வருகின்ற சர்வதேசப் பிரதிநிதிகள் அரசின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமையவே வந்து செல்கின்றனர். அத்துடன் அரசுக்கு சாதகமான அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படுகின்றன.

சர்வதேசத்துக்கு உண்மை புரிய வேண்டுமானால் பக்கச்சார்பற்ற விதத்தில் சர்வதேசப் பிரதிநிதிகளின் வருகை அமைய வேண்டும். யுத்தப் பிரதேசங்களுக்குச் சென்று நிலவரங்களை நேரில் அறிந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியா இரட்டை வேடம் போடுகின்றது. யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்றும் பேச்சுக்கு செல்ல வேண்டும் என்றும் ஊடகங்களுக்கு அறிவிக்கின்ற இந்தியா, இலங்கை அரசுக்கு ஆயுத உதவியையும் ஆட்புல உதவியையும் அளித்து வருகின்றமை எமது தமிழினத்தையே ஏமாற்றுகின்ற செயலாகும்.

இனப்பிரச்சினை தொர்பில் இந்தியாவின் தலையீடு மிக மிக இன்றியமையாதது என்பதே த.தே.கூட்டடமைப்பின் நிலைப்பாடாக இருக்கிறது. ஆனால், இந்தியாவின் அண்மைக்கால நிலைப்பாடுகள் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல் அமைந்திருக்கிறது.

தமிழக அரசியல் தலைவர்களினதும் அவர்களது ஆதரவாளர்களினதும் இலங்கைத் தமிழர் மீதான உணர்வலைகள் மகத்தானவை. அதற்காக நாம் கடமைப்பட்டுள்ளோம். தமிழகத்தில் இலங்கைத் தமிழருக்காக ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெறுகின்றன.

ஆனால், கருணாநிதி இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் எவ்வித நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அவருக்கு அதிகாரங்கள் இருந்தும் அதனைச் செய்யத் துணியவில்லை. கருணாநிதி இலங்கைத் தமிழர்கள் குறித்து சிந்திக்கப் போவதில்ல. தனது அதிகாரத்தையும் கட்சியின் செல்வாக்கையும் காப்பாற்றிக் கொள்ளும் எண்ணமே அவருக்கு இருக்கிறது.

இந்நிலையில் கருணாநிதியையோ அல்லது இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கின்ற இந்தியாவையோ நாம் நம்பிப் பயன் இல்லை. அவர்களை நம்பி ஏமாறுவதை விட எமது பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்வதே சிறந்தது.

பொலநறுவையில் சிவில் பாதுகாப்பு படைவீரர் சுட்டு இளைஞர் பலி


பொலநறுவை மெதிரிகிரிய பிரதேசத்தில் சிவில் பாதுகாப்புப் படைவீரர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 16 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாகக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது ஒரு சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸாரது உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் காரணமாக கிராம மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதல்களின் காரணமாக இரண்டு பொது மக்களும், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் காயமடைந்துள்ளனர்.

அப்பாவிப் பொதுமக்கள் மீது சிவில் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் மேற்கொண்டு வருவதாக கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் இருவர் சுட்டுக் கொலை


திருகோணமலையில் பிரபல மீன் வியாபாரியொருவரும், அவரது உதவியாளரும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இனந்தெரியாத நபர்களினால் இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

திருகோணமலை கண்டி வீதி நான்காம் கட்டையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டபிள்யூ.ஜீ. பிரசன்ன புஸ்பகுமார (41) மற்றும் பிரின்ஸ் உதயகுமார (38) ஆகியோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீட்டில் இருக்கும் போது ரி-56 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு புறக்கோட்டையில் குண்டு வெடிப்பு


கொழும்பு புறக்கோட்டைப் பகுதி மல்வத்தைச் சந்தியில் இன்று பி.ப. 12.30 மணியளவில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மல்வத்த வீதியில் உள்ள வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் வண்டியொன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெறுள்ளது.

இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்தாகவும், ஆறு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

துறைமுகத்திலிருந்து 100 மீற்றர் தொலைவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தில் பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளதாகவும், குறித்த பிரதேசத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் புறக்கோட்டையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தமிழருக்காக குரல் கொடுக்க தனி ஈழம் தோன்ற வேண்டும் -மலேசியாவில் தொல் திருமாவளவன்



ஈழ நாட்டில் வன்னி கிளிநாச்சி மண்டலத்தில் ஏறக்குறைய
3 இலட்சம் தமிழர்கள் வாழ்க்கை அடிப்படைத் தேவைகளான குடிநீர் இணவு இருப்பிடம் சுகாதார வசதி
கல்வி ஏதுமின்றி அல்லல்படுகின்ற அவல நிலையில் தமிழ் மக்கள் தலையில் குண்டு மழை பொழிகின்ற சிங்களவரின் பக்கத்தில் இந்திய இராணுவத்தினரும் இருக்கின்றனர்.

போரினால் மடிகின்றவர்கள் ஒருபக்கம் இருக்க பசிப் பிணியால் மாண்டு
போகின்ற தமிழர்களின் எண்ணிக்கை இன்னொரு பக்கம் அதிகரிக்கின்றது.
இந்த நிலையில் தமிழனுக்காக குரல் கொடுக்க வேண்டிய தரப்பிலிருந்தே
வஞ்சக காய் நகர்த்தப்படுகின்றது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு
தமிழனுக்கென்றுதனி அதிகாரம் கொண்ட நாடு தோன்ற வேண்டும்
என்று நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசியததமிழர்
தேசிய முன்னேற்றக் கழக "தமிழர் கலைவிழா"வில் சிறப்புரையாற்றிய
தமிழக விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர்
தொல்.திருமாவளவன் கூறினார்.

இன்று உலகம் முழுக்க தமிழன் அறியப்படுகிறான் என்றால் அதற்கு
ஈழத்தமிழர்தம் சுதந்திரப் போர் தான் காரணம். பழந்தமிழர் வீரத்தை
இன்று நிறுவுகின்ற ஈழ நாட்டு மறவர்கள் படைக்கின்ற தோற்றுவிக்கின்ற
மாண்பில் துப்பாக்கி பிடிக்கின்றஆற்றல் இல்லா விடினும் நானும் அதில்
பங்கெடுக்கின்றேன்.

பூச்சொங், 12 வது மைல், ராக்கான் மூடா அரங்கில் நடைபெற்ற
இந்நிகழ்ச்சியில்கூட்டரசுப்பிரதேச துணையமைச்சர் டத்தோ மு.சரவணன்,
பிபிபி கட்சியின் குணா, சிங்கைத்தமிழ்மறையான் இணையர் மற்றும்
பல பெருமக்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் உள்நாட்டு அரசியல்கட்சி
- பொது இயக்கங்கள் என்ற எல்லைகளை எல்லாம் கடந்து தமிழ்
உணர்வோடு ஏராளமானோர் கலந்து கொண்டது எழுச்சியுடன்
காணப்பட்டது.

விடுதலைப் புலிகளை பூரணமாக வீழ்த்துவதென்பது பகல் கனவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு



தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பூரணமாக வீழ்த்துவதென்பது அரசாங்கத்தின் பகல் கனவு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
யுத்த தொடர்பான நீண்ட அனுவம் கொண்ட விடுதலைப் புலிகள் தங்களது யுத்த அணுகுமுறைகளை மாற்றியமைத்து போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என ஆங்கில ஊடகமொன்றுக்கு செவ்வியளித்துள்ளார். உலகின் முன்னணி இராணுவங்களின் ஒன்றான இந்தியப் படையினருக்கு விடுதலைப் புலிகள் பெரும் சவாலாக திகழந்தார்கள் என்பதனை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் ரீதியான அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் போராட்டங்களுக்கு பயங்கரவாத முலாம் பூசப்படுவது வேதனைக்குரியதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆசிய பிராந்திய நாடுகளில் இடம்பெறும் அரசியல் போராட்டங்கள் குறித்து மேற்குலகம் எப்போதும் ஓர வஞ்சனையுடன் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பேரவலம் குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குரல் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் களைவதன் மூலம் அவர்களைப் பலவீனப்படுத்தும் முயற்சிகள் அரங்;கேற்றப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வன்னிப் பிரதேசத்தில் சொல்லொன்னா துயரங்களை எதிர்நோக்கி வரும் மக்களின் மனிதாபிமான தேவைகளைவிட நிலப்பரப்புக்களை கைப்பற்றுவதில் அரசாங்கம் அதிக சிரத்தை காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

என்ன விலைகொடுத்தேனும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை மீட்டெடுப்பதே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வன்னியில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நலன் கருதி இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை பேசைக்கு திரும்புவது மிகவும் இன்றியமையாததென அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இலங்கை இராணுவப்படையின் தளபதி சரத் பொன்சேகா பேரினவாத கொள்கைகளை கடைபிடித்து வருவதாகவும், தொழில்சார் நிலையைத் தாண்டி இனாவத கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயற்பட்டு வருவதகாவும் என். ஸ்ரீகாந்தா குறித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

யால பகுதியில் படையினர் விடுதலைப்புலிகள் தாக்குதல்

அம்பாந்தோட்டை யாலப் பகுதியின் மூன்றாவது வலயப் பகுதியில் சிறிலங்காப்படையினரை இலக்குவைத்து விடுதலைப்புலிகள் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.


இதில் சிறிலங்காப்படையினர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.


காயமடைந்த படையினர் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலையடுத்து சிறிலங்காப்படையினர் அந்தப் பகுதியில் தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.

வன்னேரிக்கு மேற்கே சிறிலங்காப்படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டதில் படையினருக்கு பாரிய இழப்பு




வன்னேரிக்கு மேற்கே முன்னரண் பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் சிறிலங்காப்படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்னகர்வு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

இதற்கு எதிராக விடுதலைப்புலிகள் தீவிர எதிர்த் தாக்குதலை நடத்தினர்
இதில் படையினர் பழைய நிலைகளுக்கு பின்தள்ளப்பட்டதுடன், படையினருக்கு இழப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

வத்திக்கான் பிரதிநிதியின் கருத்துக்களை தவறாகப் பிரசுரித்தமைக்கு அரசு மன்னிப்புக் கோர வேண்டும் - ஜயலத் ஜயவர்த்தன

வத்திக்கானின் பிரதிநிதியாக இலங்கை வந்திருந்த கர்தினால் பிரான்ஸிஸ் அரின்சே தெரிவித்த கருத்துக் குறித்து அரச ஊடகம் தவறான தகவலை உண்மைக்குப் புறம்பான தகவலை வெளியிட்டுள்ளது. எனவே தவறான செய்தியை வெளியிட்டமைக்கு வத்திக்கான் அரசிடம் மன்னிப்புக் கோரவேண்டும்.
இவ்வாறு பேராசிரியர் ஜயலத் ஜய வர்த்தன கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாப்பரசரின் மக்கள் யாத்திரை அமையத்தின் தலைவர் அதி.வண. கர்தினால் பிரான்ஸிஸ் அரின்சே இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை கடந்த 16ஆம் திகதி மேற்கொண்டிருந்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கர்தினால் சந்தித்து உரையாடியபோது மடுமாதா தேவாலயம் தொடர்பான அவர் தெரிவித்த கருத்துகள் அரச இணையத்தளத்தில் செப்ரெம்பர் மாதம் 17ஆம் திகதி கீழ்வருமாறு பிரசுரிக்கப்பட்டிருந்தது.
வரலாற்றுச் சிறப்புமிக்க மடுமாதா தேவஸ்தானத்தை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்த செயற்பாடு தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமைதாங்கும் அரசிற்கு அனைத்து கத்தோலிக்க மக்களதும் நன்றி உரித்தாக வேண்டும் என வத்திக்கான் கர்தினால் பிரான்ஸிஸ் அரின்சே செப்ரெம்பர் 16ஆம் திகதி ஜனாதிபதியைச் சந்தித்த சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார்.
ஆயினும் செப்ரெம்பர் 20ஆம் திகதி இலங்கை வத்திக்கான் தூதுவராலயத்தின் உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
கௌரவ ஜனாதிபதியுடனான நட்புறவுடனான சந்திப்பின்போது மடுமாதா தேவஸ்தானம் தொடர்பாகவோ, வேறு எந்தவித அரசியல் தொடர்பான கருத்துக்களோ அதி.வண.கர்தினால் அவர்களால் வெளியிடப்படவில்லை.
இதற்கிணங்க அரச ஊடகத்தின் வாயிலாக இவ்வாறு உரோம் வத்திக்கானின் பிரதிநிதியாக இலங்கைக்கு வருகை தந்த கௌரவத்திற்குரிய சமயத் தலைவர் பெரும் தர்மசங்கடத்திற்குள் உட்படுத்தப்பட்டுள்ளார். உண்மையில் இது பெரும் கவலைக்குரிய விடய மாகும்.
தற்போதாவது அரச ஊடகம் உண்மையை எடுத்துக்கூறி தம்மால் வெளியிடப்பட்ட செய்தியை சரிப்படுத்தல் அவசியம். அவ்வாறே தவறான செய்தியை வெளியிட்டதற்காக வத்திக்கான் அரசிடம் மன்னிப்புக் கோருதலும் அவசியம் என்றுள்ளது.

கிளிநொச்சியிலிருந்து வவுனியாவுக்கு மக்கள் வருவார்களா?


வன்னியில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்றுவரும் மோதல்கள் ஒரு தீர்க்கமான கட்டத்தை நெருங்கிவரும் நிலையில்,

எதிர்பார்த்தளவுக்கு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து மக்கள் வவுனியாவுக்கு வரவில்லை என்று ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர், பாராளுமன்ற உறுப்பினர் பேசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களை தங்கவைத்துப் பராமரிக்கக்கூடிய வசதிகள் வவுனியாவில் செய்யப்பட்டுள்ளபோதிலும், மிகக் குறைந்தளவு தொகையினரே இதுவரையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வவுனியாவுக்கு வந்திருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்கு, ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறும் பேசில் ராஜபக்ச, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சின் செயலாளர் ஆகியோர், ஐ.நா. இலங்கை வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே மற்றும் உலக உணவுத் திட்டப் பிரதிநிதி மொஹமட் சலாஹீன் ஆகியோரின் உதவியுடன் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாகக் கூறினார்.

எனினும், எதிர்பார்த்தளவுக்கு மக்கள் வவுனியாவுக்கு வரவில்லை என்று கூறும் வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஏற்கனவே ஆறு இடைத்தங்கல் முகாம்கள் இதற்கென அமைக்கப்பட்டுள்ளபோதும், இதுவரையில் எவரும் வவுனியாவுக்கு வரவில்லை என்று தெரிவிக்கிறார்.

மோதல்கள் கிளிநொச்சியை அண்மித்துவரும் நிலையில், மக்கள் தர்மபுரம் மற்றும் விசுவமடு பிரதேசங்களுக்கு அதிகளவில் இடம்பெயர்ந்திருப்பதாக வன்னித் தகவல்கள் கூறுகின்றன.

எப்படியும் வருவார்கள் - பசில் ராஜபக்ஸ

எனினும், இவர்கள் படிப்படியாக படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ச கூறுகிறார்.

“கிழக்கு மாகாணத்தில் எமது அனுபவத்தின்படி, மூதூரிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் முதலில் சம்பூருக்குச் சென்று பின்னர் அங்கிருந்து ஈச்சிலம்பற்றுக்கும், வாகரைக்கும் சென்றனர். அதன் பின்னர் அங்கிருந்து அவர்கள் படைக்கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தார்கள். இதேபோல், மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளிலிருந்து இடம்பெயரும் மக்கள் படைக்கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு படிப்படியாக வந்து சேர்வார்கள். இதற்குச் சிறிது காலம் பிடிக்கும்’’ என்று அவர் தெரிவித்தார்.

மார்க்கம் என்ன?

கடைசியாக வெளியாகியிருக்கும் களநிலவரங்களின்படி, இலங்கை இராணுவத்தின் 57வது படைப்பிரிவு கொக்காவில் ரயில் நிலையப் பகுதியைக் கைப்பற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது. இராணுவத்தினர் தற்போது ஏ-9 வீதியிலிருந்து 400 மீற்றர் தூரத்தில் தரித்திருப்பதாகவும் படைத்தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

கிளிநொச்சியை நோக்கிய தாக்குதல்கள் அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படும் என்று இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அறிவித்திருக்கும் நிலையில், படையினரின் அடுத்த கட்ட நகர்வுகள் ஏ-9 வீதியை அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துவிடும் என்றே எதிர்பார்க்கலாம். இந்த நிலையில், கிளிநொச்சியிலிருந்து இடம்பெயரும் மக்கள் வவுனியாவை வந்தடைவதற்கான பிரதான மார்க்கமான ஏ-9 வீதி முற்றாகத் தடைப்பட்டுவிடும்.

அதன் பின்னர் மக்கள் வவுனியாவுக்கு வருவதானால், பரந்தன் வீதியூடாக புதுக்குடியிருப்புக்குச் சென்று அங்கிருந்து ஒட்டுசுட்டான் ஊடாக மாங்குளத்தை அடைந்து பின்னர் ஏ-9 வீதியூடாக, புளியங்குளம் மார்க்கமாக ஓமந்தைக்கு வரவேண்டும்.

வன்னியில் தற்போதுள்ள சூழ்நிலையில் இவ்வளவு தூரத்தைக் கடந்து பயணித்து மக்கள் வவுனியாவை வந்தடைவது மிகவும் சிரமமானது என்று உதவிப் பணியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதற்கான சீரான போக்குவரத்து மார்க்கங்களும் கிடையாது என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

வவுனியாவில் படைக்குவிப்பு: மக்கள் அச்சம்

இதேவேளை, கிளிநொச்சியை அண்டிய பிரதேசங்களில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், வவுனியா நகரில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவம், விமானப்படை மற்றும் விசேட அதிரடிப்படையினர் மிக அதிகளவில் அங்கு குவிக்கப்பட்டிருப்பதாக சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றபோதிலும், இது மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக அங்குள்ள அரசசார்பற்ற நிறுவன பணியாளர்கள் கூறுகின்றனர். தமது நடமாட்டம் இதனால் பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பதாக மக்கள் தம்மிடம் முறையிட்டிருப்பதாக உதவிப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு வவுனியா முற்றிலும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ள ஒரு சூழ்நிலையில், வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து மக்கள் வவுனியாவுக்கு வருவார்களா என்பது சந்தேகமே என்று தம்மை வெளிக்காட்ட விரும்பாத உதவிப் பணியாளர்கள் சிலர் கூறுவதாக கொழும்பு ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சியிலிருந்து வவுனியாவுக்கு நகர அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலும், ஒரு தடுப்பு முகாமுக்கு வருவதற்கு அவர்கள் விரும்பமாட்டார்கள் என்றும் அவர்கள் கூறுவதாக அந்தப் பத்திரிகைச் செய்தி குறிப்பிடுகிறது.

மேலும், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள மக்களை வவுனியாவுக்கு வருமாறு அரசாங்கம் விடுத்த செய்தி அந்தப் பகுதி மக்களைச் சென்றடைந்ததா என்பது சந்தேகமே என்று தெரிவித்துள்ள உதவிப் பணியாளர்கள், அவ்வாறு மக்கள் வருவதாக இருந்தால், அவர்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்வதற்குரிய ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னிக்கு உணவு அனுப்ப ஏற்பாடு; விநியோகம் முடிவும்வரை ஐ.நா. அதிகாரிகள் அங்கு தங்கியிருப்பர் - நீல் பூனே


வன்னியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கு விநியோகிப்பதற்கான உணவு லொறிகள் ஓரிரு தினங்களில் அங்கு செல்லவிருப்பதாக ஐ.நா. இலங்கை வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே தெரிவித்தார்.

உணவு விநியோகம் முடியும் வரையில் ஐ.நா. அதிகாரிகள் அங்கு தங்கியிருப்பர் என்றும் அவர் மேலும் கூறினார்.

அரசாங்கத்தின் உத்தரவுக்கமைய, வன்னியிலிருந்து ஐ.நா. அமைப்புக்கள் உட்பட அனைத்து அரசசார்பற்ற நிறுவனங்களும் வெளியேறிய பின்னர் முதற்தடவையாக இந்த உணவு விநியோகம் இடம்பெறுவதாகத் தெரிவித்த அவர், ஐ.நா. கொடிகளுடன் உலக உணவுத் திட்டத்தின் வாகன அணி வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளுக்குச் செல்லும் என்று கூறினார்.

மக்களுக்கு உரிய முறையில் உணவு நேரடியாக விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதே எமது பிரதான இலக்கு என்று தெரிவிக்கும் பூனே, முதலாவது முயற்சி வெற்றிபெற்றாலே அதே வழியில் தமது முயற்சிகளைத் தொடர முடியும் என்றும் கூறினார்.

உணவுப் பொருள்கள் அங்கு களஞ்சியப்படுத்தப்படமாட்டாது. அவை நேரடியாக மக்கள் இடம்பெயர்ந்து தங்கியிருக்கும் இடங்களுக்கே எடுத்துச்செல்லப்பட்டு விநியோகிக்கப்படும். என்று மேலும் தெரிவித்த அவர், ஐ.நா. அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழேயே உணவு விநியோகம் இடம்பெறும் எனவும், விநியோகம் முடியும் வரையில் அவர்கள் வன்னியில் தங்கியிருப்பார்கள் என்றும் கூறினார்.

ஏ-9 வீதியில் மோதல்கள் தீவிரமாக இடம்பெற்று வருவதால், மாற்றுப் பாதைகளினூடாக கிளிநொச்சி கிழக்குப் பகுதிக்கு உணவுப் பொருள்களை எடுத்துச்செல்லத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

திருமலையில் துரிதமாக நிறைவேறும் அரசின் சிங்கள மயமாக்கல் திட்டங்கள்--சிவநடேசன்

கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் குறைவடைந்து வரும் நிலையில் அச்சமடைந்து பீதியில் உள்ளார்கள்.

கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டு அங்குள்ள மூவின மக்களும் ஜனநாயகமாக வாழ்கின்றார்கள் என கொக்கரிக்கும் அரசாங்கத்தின் பரப்புரைக்கு நேர்மாறான நிகழ்வுகளே இடம்பெற்றுவருகின்றன.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் கொடூரமான செயற்பாடுகளை படையினர் இதுவரையில் கைவிடவில்லை. கிழக்கில் விடுதலை புலிகள் இருந்த காலப்பகுதியில் மக்கள் இவ்வாறான துப்பங்களை அனுபவிக்கவில்லை.

ஆனால் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு கிழக்கு வந்தபின்னர் இராணுவத்தினாலும் துணைக் குழுக்களினாலும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன.

1985,86 காலப்பகுதியில் இருந்து துணை இராணுவக்குழுக்கள் இருந்தன. இன்று தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கடத்தல்கள், கொலை, கொள்ளைகள், கப்பம் கோரல் போன்ற வன்முறைகளும், அநீதிகளும் குறிப்பிடத்தக்களவு இடம்பெற்றன எனக் கூறலாம். எனினும் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இராணுவத்தின் பகுதிகளுக்கு வரும் மக்களை புலி என்ற பார்வை இருந்தது. அன்றைய காலப்பகுதியில் மாற்று இனமான இனவெறி பிடித்த இராணுவத்தினரே பெரும்பாலான அட்டூழியங்களை தமிழ் மக்கள் மீது மேற்கொண்டனர்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் தமிழ் இன அழிப்புக்கு தமிழர்களே துணைபோகின்றனர். . கிழக்கு மக்களை வாழவைப்போம், கிழக்கு மண்ணை மீட்போம் என்றெல்லாம் கூக்குரல் எழுப்பும் தரப்பினருக்கு ஒழுங்கான அரசியல் கொள்கை இல்லை. அவர்களிடையே ஒன்றுமையில்லை, தமிழ் இன அழிப்புக்கு துணை போகும் இவர்கள் மக்களை எவ்வாறு காப்பாற்ற முடியும். பொது மக்கள் இன்று பல்வேறு வழிகளிலும், பல்வேறு விதமான முறைகளிலும் வன்முறைகளை எதிர் நோக்குகின்றனர்.

இதனால் தமிழர்களின் கல்வி, பொருளாதாரம் மிகவும் பின்தள்ளப்படுகின்றது, இருக்கின்ற வளமும் இராணுவத்தினால் அழிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய உள்ளுராட்சி மற்றும் கிழக்கு மாகாண ஆட்சிகளை கைப்பற்றி மக்களின் குறைகளை தீர்ப்போம் என்பது வெறு வாய்ப்பேச்சாக மட்டுமே இருக்கும்.

அரசாங்கம் இந்த குழுக்களை வைத்தது தமிழர்களை அழிப்பதற்கு பயன்படுத்திக் கொள்கின்றார்களே தவிர தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை ஒரு போதும் நிறைவேற்றித் தரப்போவதில்லை. இவ்வாறு பாதிக்கப்படும் தமிழ் மக்களின் துன்ப துயரங்களை வெளியுலகுக்கு சென்றுவிடாமல் தடுப்பதற்காகவே அரசியல் ரீதியாக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை அவர்களின் மாவட்டங்களுக்கு செல்லவிடாது குழுக்களின் மூலம் அச்சுறுத்தி மிரட்டி வைத்துள்ளனர்.

ஆனால் மக்கள் பிரதிநிதிகள் அவர்களின் மாவட்டங்களில் இருந்து அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தால் அரசாங்கத்தின் உண்மை முகத்தை வெளியுலகுக்கு வெளிக்காட்டிவிடுவார்கள் என்பதை உணர்ந்த அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கத்தின் சிங்கள மயமாக்கல் திட்டம் மிகவும் துல்லியமான முறையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

அங்குள்ள அரச அலுவலகம், தனியார் கம்பனிகள், பெரிய வர்த்தக நிலையங்கள், வைத்தியசாலைகள் போன்றவற்றில் சிங்களவர்கள் தான் உயர் பதவியில் இருக்க வேண்டும். இதனால் தனியார் காப்புறுதி நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியார் சுட்டுக் கொல்லப்பட்டார், வர்த்தகர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார், அரச ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள், இவ்வாறு தமிழர்களை படுகொலை செய்து தமிழர்களின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் மிகவும் சிறந்த முறையில் காய்களை நகர்த்துகின்றது.

தற்போதைக்கு வணக்கஸ்தலங்களிலும் கைவைக்கத் தொடங்கியுள்ளனர். அவற்றில் ஒன்றுதான் திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்தின் பிரதம குருக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விடயம்.

இவ்வாறான படுகொலைகள் அனைத்தும் உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்றுவருகின்றது. அப்படியென்றால் படைத்தரப்புக்கு, காவல் துறையினருக்கு தெரியாமல் இடம்பெற வாய்ப்பில்லை. 2006ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் பின்னர் திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு என படைத்தரப்பினர் தெரிவித்தனர். இருந்தாலும் அவர்கள் புலனாய்வுப் பிரிவினர், மற்றும் பிஸ்டல் குழு உறுப்பினர்கள் சிலர் இருக்கலாம்.

ஆனால் அவர்களினால் ஆலய குருக்களை சுட்டுக் கொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. கடந்த 18ஆம் திகதி ஆரையம்பதியைச் சேர்ந்த பாடசாலை மாணவன் உட்பட யோகநாத் சுரேஸ் வயது 25, கணேசமுதலி சுகந்தன் வயத 16 இரு இளைஞர்கள் கால்நடை விற்பனைக்காக காத்தான்குடி பகுதிக்கு சென்றவர்கள் இதுவரையில் வீடு திரும்பவில்லை.

இது தொடர்பாக ஆரம்பத்தில் இவர்களை வெள்ளை வானில் வந்தவர்களினால் கடத்தப்பட்டதாக தெரிவித்திருந்தனர். அதன் பின்னர் ஆயுதக்குழுக்கள் கடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது முஸ்லிம்களினால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உண்மையில் இந்த இரு இளைஞர்களுக்கும் என்ன நிகழ்ந்துள்ளது என்பது மர்மமாகவே உள்ளது. இரு இளைஞர்களும் ஆடு விற்பனைக்காக சென்றவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் நூற்றுக்கு மேற்பட்ட ஆடுகளை கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவர்களிடம் இருந்த பணத்திற்காகத்தான் இச்சம்வம் இடம்பெற்றதாகவும் மற்றொரு தகவல் தெரியவந்துள்ளது. விடுதலை புலிகள் ஊடுருவியுள்ளதாக தெரிவித்து தமிழர் கிராமங்களை சுற்றிவளைத்து தேடுதல்களை மேற்கொண்டு அப்பாவி தமிழர்களை கைது செய்து தடுத்து வைக்கும் படையினர் ஏன் முஸ்லிம் பகுதிகளில் உள்ள ஆயுதங்களையும் அதனுடன் தொடர்புடைய தரப்பினரையும் கைது செய்ய முடியவில்லை என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அத்துடன் இனங்களிடையே நல்லூறவை ஏற்படுத்தும் வகையிலான நல்லிணக்க சபைகளை முதல் அமைச்சர் அண்மையில் உருவாக்கியிருந்தார். இரு இளைஞர்களும் கடத்தப்பட்டமை தொடர்பாக ஏன் இந்த அமைப்பு விரைந்து செயற்படவில்லை என்ற கேள்விக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்.

கிழக்கு மாகாணம் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்த நாளிலிருந்து இன்றுவரைக்கும் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்படும் அனைத்து அசம்பாவிதங்களும் அங்குள்ள பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் தான் இடம்பெற்றுவருகின்றது. இந்தக் குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட தரப்பி னர் மறுத்தால் கிழக்கு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற பரப்புரையை கைவிட வேண்டும். அத்துடன் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

தமிழில் பேச முயல்வதை விட தமிழரோடு பேச முயன்றிருக்கலாம் - உதயனின் ஆசிரியர் தலையங்கம்

கடந்த புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் 63 ஆவது பொது அமர்வில் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரை முக்கிய பல செய்திகளை அவரது அரசின் தீவிர நிலைப்பாட்டுப் போக்கு உட்பட்ட பல விடயங்களை வெளிப்படையாகவே எடுத்தியம்பி நிற்கின்றது.
உலக நாடுகளின் பொதுமன்றமான ஐ.நாவில் போய் நின்றுகொண்டு புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துத் தங்களின் போர் வலிமையைக் கைவிட்டு, ஜனநாயக வழிக்குத் திரும்பினால் மட்டுமே புலிகளுடன் பேச்சு, இல்லையேல் யுத்தம்தான் ஒரே மார்க்கம் என்று அவர் அங்கு முழங்கியிருக்கின்றார்.
இது, அமைதி வழித் தீர்வு இனிச் சாத்தியமே இல்லையென்ற போர்ப்பிரகடனமாகக் கருதப்படவேண்டிய அறிவிப்பாகும்.
இந்தத் திட்டவட்டமான அறிவிப்பின் மூலம், அமைதி முயற்சிக்கான கதவை இறுகச் சாத்தி, வலிமையான போர்ப்பூட்டை அதற்குப் போட்டுப் பூட்டி, தீர்வு என்ற அதன் திறப்பை மீண்டும் கைக்கு எட்டவேமுடியாத பாதாளத்திற்குத் தூக்கி வீசிவிட்டார் இலங்கைத் தீவின் ஜனாதிபதி என்றே கருத நேர்ந்திருக்கின்றது.
கடந்த இரண்டரை தசாப்தகால இலங்கை அரசின் போக்கை குறிப்பாக விடுதலைப் புலிகளின் செயற்பாட்டை உற்றுநோக்குபவர்கள் ஒரு விடயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும்.
அது ஈழத்தமிழர்களின் அபிலாசைகளை நிறைவு செய்யும் நியாயமான ஒரு தீர்வு எட்டப்பட்டு அது முழு அளவில் நடைமுறைப்படுத்தப்படும்வரை தங்களுடைய உரிமைப் போருக்கான ஆயுத பலத்தை எந்த அழுத்தம் கருதியும் விடுதலைப் புலிகள் கைவிடவே மாட்டார்கள் என்ற யதார்த்தம்தான். அந்தக் கொள்கைப் பிடிப்பில் புலிகள் எவ்வளவு பற்றுறுதியும் திடசங்கற்பமும் கொண்டவர்கள் என்பது யாவருக்கும் புரிந்த விடயமே.
ஆகவே, புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு தமது போர்த்திறன்களைத் துறந்தால் மட்டுமே இனி அமைதிப் பேச்சு என்று அறிவிப்பதும்
இனிப் பேச்சே இல்லை, இனிப் போர்தான் என்று பிரகடனப்படுத்துவதும் ஒன்றுதான்.
ஐ.நா. சபையின் கடந்த வருடப் பொது அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அங்கு நடந்துகொண்ட தமது செயற்பாடுகள் மூலம் தென்னிலங்கைச் சிங்களத்தை மெய்சிலிர்க்க வைத்தார்.
இலங்கையின் இதற்கு முந்தைய தலைவர்கள் ஐ.நா. பொதுச்சபை அமர்வு போன்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில், உலக சமூகத் தலைவர்களுக்குப் புரியும் வகையில் ஆங்கிலமொழியிலேயே உரை நிகழ்த்துவது வழமையாக இருந்து வந்தது.
ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ கடந்த வருட ஐ.நா. பொதுச்சபை அமர்வில் முற்றுமுழுதாக சிங்களத்தில் தமக்கு நன்கு பரிச்சயமான மொழியில் முழங்கி, சிங்கள மக்களைப் பேருவகையில் ஆழ்த்தினார்.
ஐ.நா. மன்றத்திலேயே தனிச்சிங்களத்தில் முழங்கி நம் மொழிக்குப் பெருமையை உலக மன்றத்தில் சேர்த்தார் நாட்டின் தலைவர் என்று தென்னிலங்கையின் பௌத்த சிங்கள மேலாதிக்கம் அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. சிங்களத்தில் பேசிய தமது அந்தப் பாவனை நடிப்பில் தென்னிலங்கையை அதிகம் மயக்கி வெற்றிகண்ட ஜனாதிபதி மஹிந்தர், அதே தந்திரோபாயத்தைத் தமிழர் மீதும் பிரயோகிக்கத் தீர்மானித்தார் போலும்!
இந்தத் தடவை ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் தமிழிலும் சில வார்த்தைகள் பேசினால் கடந்த வருடம் தென்னிலங்கைப் பௌத்த சிங்களப் பேரினவாதத்தை மயக்கியமை போல வடக்குக் கிழக்குத் தமிழர்களையும் மயக்கிவிடமுடியும் என்று ஆட்சித் தலைவர் பகற்கனவு கண்டிருக்கின்றார் போலும்.
அதனாலேயே சில கருத்துகளை தமிழில் எழுதி, வாசித்துப் பாடமாக்கிச் சென்று அவற்றைத் தமது நீண்ட சிங்கள உரையின் மத்தியில் தமிழில் ஒப்புவித்திருக்கின்றார் அவர்.
ஆனால் படித்த புத்திசாலிகளை அதிகம் கொண்ட ஈழத்தமிழர் சமூகம், இந்த நடிப்புக் காய்ச்சல் தந்திரோபாயத்திற்கு நசிந்து கொடுக்கவில்லை. அந்த முயற்சிக்கு எடுபடவுமில்லை.
தமிழே தெரியாத ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சில தமிழ் வாசகங்களைச் சிங்களத்தில் எழுதிப் பாடமாக்கித் தமது நியூயோர்க் உரையில் அவற்றைப் பிரயோகித்ததும், அதற்கு அப்படியே அடிமைப்பட்டு, பரவசப்பட்டு நிற்பதற்குத் தமிழர்கள் தரப்பு ஒன்றும் முட்டாள்கள் அல்லர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது ஐ.நா. உரையில் தமிழில் பேச முயற்சித்திருப்பதை விட, தமிழர் தரப்போடு தாம் பேசுவது குறித்து ஆக்கபூர்வமான பயனுள்ள வகையில் ஒரு கருத்தைக் கூறியிருப்பாராகில் அது இலங்கைப் பிரச்சினைக்கு அமைதித் தீர்வைக் காண்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தைத் தந்திருக்கும்.
ஆனால், அமைதி வழியில் அல்ல, இராணுவ வழியிலேயே தீர்வு என்று விடாப்பிடியாக பிடிவாதமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்திருப்பதால், இத்தகைய தமிழ்ப் பேச்சு தந்திரோபாய எத்தனம்தான் அவரிடமிருந்து வெளிப்படமுடியும்.
சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்?

கிளிநொச்சியில் பட்டினி அபாயம் அரச உணவுக் களஞ்சியங்கள் காலி! 3 வாரமாக நிவாரண உணவு இல்லை!! வவுனியாவிலிருந்து எடுத்து வருவதற்கு முயற்சி

போர் தீவிரமடைந்திருக்கும் வன்னியின் பிரதான மாவட்டமான கேந்திரப் பிரதேசமான கிளிநொச்சியில் உள்ள அரசாங்க உணவுக் களஞ்சியங்கள் எல்லாமே, வெறிதாகிவிட்டன காலியாகிவிட்டன. அதனால் நில புலங்களையும் வீடு வாசல்களையும் விட்டு வெளியேறி, பல தடவைகள், பல இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ள சுமார் ஒன்றரை இலட்சம் மக்களுக்கு கடந்த மூன்று வாரங்களாக நிவாரண உணவுப் பொருள் எதுவும் வழங்கப்படவில்லை!!
வவுனியாவில் உலக உணவுத் திட்டத்தினால் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள உணவுப் பொருள்கள் எடுத்துவரப்படாவிட்டால் பலர் பட்டினியால் மாளும் மிக அபாயகரமான நிலை ஒன்று உருவாகி உள்ளது.
போரினால் பாதிக்கப்பட்டு, உயிரைக் கையில் பிடித்துகொண்டு, மாறி மாறிப் பல இடங்களுக்குச் சென்ற மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்களையும் ஏனைய உடனடித் தேவைகளையும் வழங்கி வந்த மனிதநேய சர்வதேச மற்றும் அரச சார்பற்ற தொண்டு அமைப்புக்கள் வன்னியை விட்டு வெளியேறியதன் உடனடித் தாக்கம் இதுவென்று அவதானிகள் கருத்து வெளியிட்டனர்.
ஐ.நா. சார்பு தொண்டு நிறுவனங்கள் உட்பட சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அவற்றின் பாதுகாப்புக் கருதி, வன்னியை விட்டு வெளியேறவேண்டும் என்று அரசாங்கம் இம்மாதம் எட்டாம் திகதி அறிவித்திருந்தது. மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் 15 ஆம் திகதி வரை அவகாசம் விதித்தார்.
இத்தகைய சூழ்நிலையில், வன்னி மக்கள் தொண்டு நிறுவனங்களை வெளியேற வேண்டாம் என்று முற்றுகைப் போராட்டம் நடத்திய போதிலும் ஐ.நா.தொண்டர் அமைப்புகள் ஆகக் கடைசியாக இம்மாதம் 16 ஆம் திகதி வெளியேறின.அதன் உட னடித் தாக்கமாக நிவாரணப் பொருள்கள் கூட கிடைக்காத மிகவும் ஆபத்தான பட்டினிச் சாவு நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.
மிகவும் ஆபத்தான மனிதாபிமானப் பிரச்சினை உருவெடுத்துள்ள இன்றைய நிலை குறித்து கிளிநொச்சி அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் கொழும்பு வந்திருந்த சமயம் நேற்று அவருடன் தொடர்பு கொண்டு கேட்டோம்.
அவர் நிலைமையைப் பின்வருமாறு விளக்கினார்:
கிளிநொச்சி மாவட்டத்தில் அறுபது சத வீதமான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து விட்டனர். மொத்தம் 1,42,000 பேர் தமது சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்து வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று தங்கி உள்ளனர்.
அரச களஞ்சியங்களில் கையிருப்பில் இருந்த அத்தியாவசிய உணவுப் பொருள்கள் முற்றாகத் தீர்ந்துவிட்டன. அதனால் நிவாரண விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் செப்ரெம்பரின் முதல் வாரத்தில் நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் நிவாரணம் வழங்க முடியாத நிலையில் உள்ளோம்.
இது குறித்து அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளோம். உணவுப் பொருள்களை அனுப்ப அவர் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரச நிவாரணம் வந்து சேர்ந்ததும் இடம் பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்க உடன் ஏற்பாடு செய்யப்படும்.
இதற்குப் புறம்பாக உலக உணவுத் திட்டத்தின் உணவுப் பொருள்கள் வவுனியா களஞ்சியத்தில் உள்ள உணவுப்பொருள்களை கிளிநொச்சிக்கு எடுத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்தப் பொருள்கள் வந்து சேரும் பட்சத்தில் மக்களின் உணவுப் பிரச்சினைகள் ஓரளவு நீங்கும்.
கிளிநொச்சிச் செயலகம், கிளிநொச்சி ஆஸ்பத்திரி உட்பட முக்கிய அரசாங்கத் திணைக்களகங்கள் தொடர்ந்தும் கிளிநொச்சியிலேயே இயங்குகின்றன. பாடசாலைகளும் இயங்க ஆரம்பித்துள்ளன. இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பல பாடசாலைகளில் இருந்து அவர்கள் வெளியேறியதால் அவை இயங்க ஆரம்பித்துள்ளன என்றார் அரச அதிபர்.

அவசர நோயாளர்களை வவுனியா அனுப்ப முடியவில்லை: கிளிநொச்சி சுகாதார பணிப்பாளர்


மாங்குளத்திற்கும், கிளிநொச்சிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஏ-9 நெடுஞ்சாலையில் நிலவுகின்ற போர் பதற்றமான சூழ்நிலை காரணமாக கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு அவசர நோயாளர்களை அனுப்பி வைப்பது சிக்கல் நிறைந்த பணியாக மாறியிருப்பதாக கிளிநொச்சிப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் இவ்விடயம் குறித்துத் தெரிவிக்கையில், நேற்றைய விமானக் குண்டு வீச்சில் காயமடைந்த இருவரை மேலதிக சிகிச்சைக்காக வவுனியாவிற்கு அனுப்பிவைக்க முடியாமல் போயிருப்பதாக குறிப்பிட்டார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் அனுப்பி வைக்க முயற்சித்தோம். எனினும் அவர்கள் வழித்துணை வழங்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வரும் வாரங்கள், நாட்கள் நான்காம் கட்ட ஈழப்போரின் உச்சக்கட்டமாக இருக்கும் - இக்பால் அத்தாஸ்


தமிழீழ விடுதலைப்புலிகளின் பலமான இடமாகிய வன்னியின் கதவடியில் தற்போது இலங்கைப் படையினர் இருப்பதாகவும் அவர்கள் இந்த வாரம் கிளிநொச்சியை நோக்கி தாக்குதல்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் போரியல் ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியின் 85 வீதமான மக்கள் தற்போது தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வன்னிக்கான உணவுகளை கொண்டு சுமார் 60 பாரஊர்திகள் தற்போது அங்கு செல்வதற்கு தயராகவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த உணவு வாகனத் தொடரணி செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் அதனைக் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு அச்சம் இருப்பதை உணரமுடிகிறது. எனவே ஏ 9 வீதியில் செல்லவுள்ள இந்த வாகனத் தொடரணி பின்னர், கிழக்குப்புறமாக தமது பாதையை மாற்றிச் செல்லவே ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தநிலையில் அடுத்துவரும் வாரத்தில் வன்னியில் பாரிய மோதல்கள் இடம்பெறப்போவதை உணரமுடிகிறது. மணலாற்றிலிருந்து முன்னேறும் படையினருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலக்கண்ணிகள் பாரிய தடைகளை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் மோதல்கள் ஏற்படும் போது அதற்கு மாற்றாக கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல்களை நடத்துவர் என்ற நிலை காணப்படுகிறது எனினும் இதனைத் தான் சமாளிக்கமுடியும் என படைத்தரப்பு தெரிவித்துள்ளதாக இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கிழக்கில் தற்போது கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் படையினருக்கு உதவி வருகின்றனர்.

இதேவேளை வருகின்ற நாட்கள், வருகின்ற வாரங்கள் நான்காவது கட்டஈழப்போரில் பாரிய மோதல்கள் ஆரம்பமாகப் போவதையே இன்றைய களநிலவரங்கள் எடுத்துக்காட்டுவதாக இக்பால் அத்தாஸ் எதிர்வு கூறியுள்ளார்.

மட்டக்களப்பு சித்தாண்டி திகிலிவெட்டைப் பகுதியில் கருணா அணியின் முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்


மட்டக்களப்பு காட்டுப் பகுதியில் அமைந்துள்ள கருணா குழுவின் முகாமொன்றின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரியவருகியது.

இந்தத் தாக்குதலில் கருணா குழுவின் ஒர் உறுப்பினர் கொல்லப்பட்டதுடன், எட்டு பேர் காயமடைந்துள்ளதாக மட்டக்களப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கொல்லப்பட்டவரின் சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயம் அடைந்தவர்களும் அங்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இராணுவம் கிழக்கை கைப்பற்றிய பின்னர் கருணா குழுவின் முகாம் மீது நடத்தப்பட்ட முக்கிய தாக்குதலாக இது கருதப்படுகின்றது.

அப்பகுதிக்கு வந்த குழுவொன்று மேற்படி அலுவலகம்மீது மேற்கொண்ட திடீர் தாக்குதல் காரணமாக அலுவலகத்தில் இருந்தக ருணா குழுவின் உறுப்பினரான கதிரொளி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், மேற்படி அலுவலகத்தில் இருந்த மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி தாக்குதலை நடாத்தியோர் அப்பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக கருணா, பிள்ளையான் அணிகளிடையேயான மோதல்கள் கிழக்கில் மீண்டும் ஆரம்பமாகி உள்ள நிலையில் பிள்ளையானை கருணா குழுவின் பிரதித்தலைவர் பதவியிலிருந்து கருணா நீக்கியிருப்பதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டிருக்கிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திகிலிவட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து அமைத்திருந்த மினி முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏனையோர் தப்பியோடி விட்டனர். ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

கிரான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட திகிலிவட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் தமிழ் துணை இராணுவக் குழுவினரும் மினி முகாம் அமைத்திருந்தனர்.

இம்முகாம் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2:15 மணியளவில் விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்தினர். முகாமை தமது கட்டுப்பாட்டில் 15 நிமிடம் வரை வைத்திருந்து அங்கிருந்தவற்றினை முழுமையாக தாக்கியழித்துள்ளனர்.

இத்தாக்குதலின் போது சிறிலங்கா இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டனர். ஏனையோர் தப்பியோடி விட்டனர்.

இதில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுத விவரம்:

ரி-56 ரக துப்பாக்கிகள் - 05

பிகே எல்எம்ஜி - 01

பிகே எல்எம்ஜி ரவைகள் - 100

ஏகே ரவைகள் - 200

ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்

மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைக் குண்டுதாரி முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

வவுனியா பஸ்தரிப்பு நிலையத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் எனக் கருதப்படும் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு 9 பேர் கடும் காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் 3 பெண் காவற்துறைச் சிப்பாய்கள் உள்ளிட்ட 4 காவற்துறையினரும் 3 இராணுவச் சிப்பாய்களும் காயம் அடைந்ததாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் வாகனமொன்றை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் குடாநாட்டில் படையினரின் கெடுபிடிகளினால் அல்லலுறும் அப்பாவி தமிழ் மக்கள் - கஜேந்திரன் பொன்னம்பலம் எம்.பி


யாழ்ப்பாண குடாநாட்டில் பாதுகாப்பு காரணங்கள் என்ற போர்வையில் படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் காரணமாக அப்பாவி தமிழ் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக யாழ் நகர வீதிகளில் செல்லும் பொதுமக்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

படையினரின் கட்டுப்பாட்டுக்குள் யாழ் நகரம் காணப்பட்ட போதிலும் மக்கள் எவ்வித சுதந்திரத்தையும் அனுபவிக்கவில்லை எனவும், மக்கள் பெரும் கெடுபிடிகளை எதிர்நோக்குவதாகவும் சண்டே லீடர் வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், பெரும் எண்ணிக்கையிலான படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திடீரென மக்கள் குழுக்களாக பாடசாலைகள் மற்றும் பொது இடங்களுக்கு அழைக்கப்பட்டு தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியே செல்ல வேண்டுமானால் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இராணுவத்தினரிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், ஒரு நாள் படகில் பயணிக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உண்மையில் யாழ்ப்பாண மக்கள் ஓர் திறந்வெளி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் படைப்பிரிவினரால் மரண அச்சுறுத்தல் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி அழைப்புக்கள் நகரீகமற்ற முறையில் ஒட்டுக் கேட்கப்படுவதாவ அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு ஆனந்த சங்கரிக்கு?


ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வெற்றிடமாகியுள்ள தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரின் இடத்துக்கு மறைந்த அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளேயின் மனைவி சுதர்சினி அல்லது தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி நியமிக்கப்படலாம் எனத் தெரிய வருகிறது.


வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தார்.

தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் அதே இடத்திற்கு வசந்த சமரசிங்கவை நியமிக்குமாறு மக்கள் விடுதலை முன்னணி ஐக்கிய மக்கள் சுதந்த்pரக் கூட்டமைப்பிடம் கோரியிருந்தது. அவ்வாறானதொரு கோரிக்கை மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வாவினால் முன்வைக்கப்பட்ட போதும் அக்கட்சி பகிரங்கமாகவே அறிக்கை விட்டு அரசிலிருந்து வெளியேறியுள்ளதால் வெளியேறிய கட்சிக்கு அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட மாட்டாதென கட்சியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் கடந்த வாரம் கூடிய போது வெற்றிடமாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை தெரிவித்திருந்தார்.

இவ்வெற்றிடத்துக்கு மறைந்த முன்னாள அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளேயி;ன் மனைவி சுதர்சினி பெர்ணான்டோபுள்ளேயின் பெயரும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரியின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே இதுவரை அரசியலுக்கு வருவதற்கான விருப்பத்தைத் தெரிவிக்காததால்

ஆனந்தசங்கரிக்கே அந்த வாய்ப்பு செல்ல இருப்பதாகவும் சுதந்திரக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் ஆளும் அரசாங்கத்தின் வெற்றிடம் ஒன்றை ஆனந்தசங்கரி பொறுப்பேற்க மாட்டார் என என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.:

காத்தான் குடிக்கு ஆடுவிக்கச் சென்று காணாமல் போனவர் உருக்குலைந்த சடலமாக மீட்பு

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு ஆடுவிற்கச் சென்று காணாமல் போன இரு இளைஞர்களி;ல் ஒருவர் சடலமாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை அம்பாறை நிந்தவூர்க் கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் இவர்களில் ஒருவருடையது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி ஆரையம்பகுதி பகுதியிலிருந்து கே.துஷாந்தன் (25) லோகநாதன் சுரேஷ் (16) ஆகிய இரண்டு இளைஞர்களும் ஆடு விற்பதற்காகக் காத்தான்குடிக்குச் சென்ற போது காணாமல் போயினர்.


இவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதியதால் இவர்களை விடுவிக்கக் கோரி ஆரையம்பதியிலும் பின்னர் மட்டக்களப்பிலும் கடையடைப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது. இவர்களை ஆயுதக்குழுவொன்றே கடத்தியதாக ஆரையம்பதி மக்கள் கூறிவந்த நிலையில் காணாமல் போன இருவரில் ஒருவரது சடலம் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் நிந்தவூர் வைத்தியசாலைவீதிக் கடற்கரைப்பகுதியில் மிகவும் பழுதடைந்த நிலையில் கரையொதுங்கியது.


சடலம் பழுதடைந்திருந்த போதிலும் துஷாந்தனின் மைத்துனர் சடலத்தை துஷாந்தனுடையது தான் என அடையாளம் காட்டினார். காத்தான்குடிப் பகுதியில் காணாமல் போனவர்களில் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றையவரின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

கொழும்புக்கு அண்மையாக கடற்படையினர் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல்

கடற்படை ரோந்துப்படகை விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இரண்டு மாலுமிகள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் இலங்கை நேரப்படி இரவு எட்டு மணியளவில் கொழும்புக்கு அண்மையாக உள்ள வத்தளை கடற்பரப்பில் இடம் பெற்றுள்ளது என அறியப்படுகிறது.

இச் செய்தி எமக்குக் கிடைத்த பின்னர் இதனை உறுதிப்படுத்த முயன்றபோதும், சிறிலங்காவில் ஊடகச் செய்திகளுக்கான கட்டுப்பாட்டின் காரணமாக, இதுவரையில் அது சாத்தியமாகவில்லை. அதே சமயம் விடுதலைப்புலிகள் தரப்பிலும் இதுவரை ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை.

நேற்று முன்தினம் பூநகரியிலுள்ள விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் ஒன்று கூடும் முகாமை சிறிலங்கா விமானப் படையினர் தாக்கியழித்தாகத் சிறிலங்கா அரசு தெரிவித்திருந்த பின்னரே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Protests in Tamil Nadu gain momentum, Jayalalithaa extends support

In a significant move amid the building momentum in Tamil Nadu where Tamil leaders are voicing their support to the Eezham Tamils as the Sri Lankan forces intensified their attacks on Vanni, the former Chief Minister of Tamil Nadu and the Leader of All India Anna Dravida Munnetra Kazhagam, J. Jayalalithaa, Saturday extended her support to a fasting campaign being organised by the Communist Party of India (CPI). In a letter to D. Pandyan, the general secretary of the CPI in Tamil Nadu, Ms. Jayalalithaa said her party extended wholehearted support to the success of the campaign, which highlights the problems and urges to safeguard the lives, properties and the rights of the Tamils in Sri Lanka.

Ms. J. Jayalalithaa The CPI organised fasting campaign is to take place in all the district capitals of Tamil Nadu state on 02 October that falls on the date of Mahatma Gandhi's birthday.

The CPI has urged the Centre in India to pressurise the Sri Lankan government to immediately halt the killings and to return to the path of negotiations, stating that the war being waged by the Sri Lankan government is against Tamil speaking population in general and that it was not viewed as a war against a militant movement.

The leftist parties in Tamil Nadu, which aim to form a third front in the coming elections, have extended their support to Eelam Tamilas Tamil Writers Association also voiced for the rights of Eezham Tamils.

In the meantime, Dr. S. Ramadoss, the founder-leader of Pattali Makkal Katchi (PMK) in Tamil Nadu has also announced a protest on 30 September.

The president of the movement Dravidar Kazhagam (DK) K. Veeramani and Thol. Thirumavalavan, the leader of the political party Viduthalai Chiruthaigal Kadchchi (VCK), courted arrest last Tuesday along with five hundred of their cadres while attempting a rail blockade in Chennai, the capital city of Tamil Nadu, to protest against Indian aid to the Sri Lankan state.

The reports of the engagement of Indian military radar operators in the wake of an attack by the Tigers on Sri Lankan Forces Vanni Headquarters (SF-HQ) in Vavuniyaa, in which at least two Indian personnel were wounded, have fuelled the protests in Tamil Nadu against Indian military aid to Colombo against Tamils.

Jayalalithaa's letter to CPI leader D. Pandyan

நன்றி : தமிழ்நெற்.

இலங்கைத் தீவில் வாழும் மொத்த தமிழ்இனத்தின் எதிர்கால இருப்புக்கான அச்சுறுத்தல்:நிலவரம்

இன்று வன்னியில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் அங்கு வாழும் மக்களுக்கு மட்டுமான அச்சுறுத்தல் அல்ல. இலங்கைத் தீவில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் எதிர்கால இருப்புக்குமான அச்சுறுத்தல்

என சுவிசில் இருந்து மாதம் இருமுறை வெளிவரும் நிலவரம் பத்திரிகை 26.09.08 ல் தனது ஆசிரியர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

சிறி லங்கா அரசின் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இன்று வன்னி மண்ணிலே தோற்றுவிக்கப் பட்டுள்ள மனித அவலம் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களிடையே ஒரு வகை ஆவேசத்தையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயருமாறு நிர்ப்பந்திக்கப் பட்டமை அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்காமை, மருத்துவம் உட்பட அடிப்படை வசதிகளை மறுத்து வருகின்றமை, உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு உதவுவதைத் தடுத்து அவற்றை அப்பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றியமை, விமானக் குண்டுவீச்சுக்குளையும் இடைவிடாத எறிகணை வீச்சுக்களையும் பொதுமக்களின் குடியிருப்புக்குளை இலக்கு வைத்து நடாத்திக் கொண்டிருக்கின்றமை என்பன ஈழத் தமிழர்கள் மனங்களில் இத்தகைய உணர்வுகள் தோன்றக் காரணமாயின.

சிறி லங்கா அரசின் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இன்று வன்னி மண்ணிலே தோற்றுவிக்கப் பட்டுள்ள மனித அவலம் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களிடையே ஒரு வகை ஆவேசத்தையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இரண்டு
இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயருமாறு நிர்ப்பந்திக்கப் பட்டமை அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்காமை, மருத்துவம் உட்பட அடிப்படை வசதிகளை மறுத்து வருகின்றமை, உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு உதவுவதைத் தடுத்து அவற்றை அப்பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றியமை, விமானக் குண்டுவீச்சுக்குளையும் இடைவிடாத எறிகணை வீச்சுக்களையும் பொதுமக்களின் குடியிருப்புக்குளை இலக்கு வைத்து நடாத்திக் கொண்டிருக்கின்றமை என்பன ஈழத் தமிழர்கள் மனங்களில் இத்தகைய உணர்வுகள் தோன்றக் காரணமாயின.

ஐ.நா. நிறுவனங்கள் உள்ளிட்ட சர்வதேச தொண்டு நிறுவனங்களை வெளியேறுமாறு சிறி லங்கா அரசு உத்தரவிட்ட போது சர்வதேசம் சீற்றம் கொள்ளும், தம்மை இனப்
படுகொலையில் இருந்து பாதுகாக்க காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தமிழ் மக்கள் பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால் வழக்கம் போன்று வெற்று அறிக்கைகளை வெளியிடுவதோடு அவை தம் பணியைச் சுருக்கிக் கொண்டன.

சர்வதேச சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் செல்வாக்கு மிக்க நாடுகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை தத்தமெக்கென தனியான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருக்கின்றன என்பது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. இதனால் தான் உலக அரங்கில் ஒரே மாதிரியான சூழ்நிலை நிலவும் பிரதேசங்களில் ஒன்றுக்கொன்று முரணான கொள்கைகளை, செயன்முறைகளைக் கடைப்பிடிக்க அவற்றால் முடிகின்றது.

இதற்கு அண்மைய உதாரணம் தெற்கு ஒஸ்ஸற்றிய விவகாரம். ஜோர்ஜியாவே தொடக்கி வைத்த இந்த மோதலில் உயிர் மற்றும் சொத்தழிவுகளைச் சந்தித்து பெரும்பாலான மக்கள் இடம்பெயர்ந்தது தெற்கு ஒஸ்ஸற்றிய பகுதியிலேயே. ஆனால், மேற்குலகும் அது சார்ந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களும் வரிந்து கட்டிக் கொண்டு உதவியது ஜோர்ஜிய பிராந்தியத்தில் வாழ்ந்த மக்களுக்கே. இங்கே வாழ்ந்த மக்கள் சந்தித்தது ஒரு சில நாட்கள் இடம்பெயர்வை மாத்திரமே. அதுவும் கூட தேவையற்ற ஒரு இடப்பெயர்வு.
ஆனால், விவகாரத்தில் அமெரிக்காவின் பரம வைரியான ரஸ்யா தலையிட்டிருந்தமை யாருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதாக இருந்தது.

மற்றுமொரு அண்மைய உதாரணம் மியன்மார். இங்கே இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானே உதவுவதாகவும் வெளிநாட்டு உதவிகள் அவசியமில்லை எனவும் மியன்மார் ஆட்சியாளர்கள் அறிவித்திருந்தார்கள். இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் தாங்கள் நேரடியாகச் சென்று உதவிகளை வழங்க அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் தாம் பலாத்காரத்தைப் பிரயோகிக்கப் போவதாகவும் எச்சரித்திருந்தது. இது தவிர சீற்றமடைந்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் நேரடியாக மியான்மார் சென்று ஆட்சியாளர்களுடன் பேசி இருந்தார்.
இத்தனைக்கும் மியன்மார் ஆட்சியாளர்கள் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவி செய்வதைத் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ அவற்றை வெளியேறுமாறு அறிவிக்கவோ இல்லை.

ஆனால், வன்னியைப் பொறுத்தவரை சிறி லங்கா உதவிகளை வழங்க மறுப்பது மட்டுமன்றி உதவி வழங்கும் நிறுவனங்களையும் அச்சுறுத்தி அப்பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றி
இருக்கின்றது. மோசமான அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ள கிளிநொச்சிப் பகுதிக்கு உணவு உட்பட நிவாரணப் பொருட்கள் எடுத்துவரப் படவில்லை என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ள அதேவேளை, வன்னிப் பிராந்தியத்தில் நிலை கொண்டுள்ள ஒரேயொரு சர்வதேச நிறுவனமான சர்வதேச செஞ்சிலுவைக் குழுவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இப்பகுதிக்கு அனுமதிக்கப்படும் ஒன்றிரெண்டு வாகனங்களும் கூட சிறி லங்காப் படையின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதல்களுக்கு இலக்காக வருகின்றன. இத்தகைய வாகனங்களுக்கு செஞ்சிலுவைக் குழுவின் வழித்துணை கோரப்பட்ட போதிலும் அதுவும் கிட்டவில்லை.

இத்தகைய நிலையில் வன்னியில் உள்ள மக்கள் சொல்லொணாத் துயரை அனுபவித்து வருகின்றனர். சிறி லங்கா அரசு அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவது மட்டுமன்றி உணவை ஆயுதமாகப் பயன்படுத்துதல் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி
இடம்பெயரச் செய்தல், திட்டமிட்ட முறையில் இனச் சுத்திகரிப்புப் பாணியில் தமிழ் மக்களைப் படுகொலை செய்தல் என பல்வேறு போர்க்குற்றங்களையும் புரிந்து வருகின்றது. இவற்றைத் தட்டிக் கேட்க வேண்டிய சர்வதேச சமூகமோ வெறும் பேச்சுடன் திருப்திப்பட்டுக் கொள்ள முனைகின்றது.

இந்நிலையில் நாம் சும்மா இருந்து விடலாமா? இன்று வன்னியில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் அங்கு வாழும் மக்களுக்கு மட்டுமான அச்சுறுத்தல் அல்ல. இலங்கைத் தீவில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் எதிர்கால இருப்புக்குமான அச்சுறுத்தல். எனவே என்ன விலை தந்தாவது அது தடுக்கப்பட வேண்டும். அந்தச் செயன்முறையில் புலம்பெயர் தமிழ் மக்களும் ஒருமுகமாக இணைந்து கொள்ள வேண்டும்.

கிளிநொச்சி மீதான தாக்குதலை ஆரம்பிப்பதற்கு முன் மக்கள் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் - மன்னார் ஆயர்

கிளிநொச்சி மீதான தாக்குதலை ஆரம்பிப்பதற்கு முன் மக்கள் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

அதற்காக மக்கள் பாதுகாப்பு வலயங்களை ஏற்படுத்த வேண்டும் என மன்னார் மாவட்ட மறை ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி ராயப்பு ஜோசப் ஆண்டகை கோ?க்கை விடுத்துள்ளார்.

அளித்த செவ்வியின் போதே அவர் இவ்வாறு கோரினார்.

அவர் தனது செவ்வியில் மேலும் தெரிவித்ததாவது, ஐக்கிய நாடுகளினதும் ஏனைய தொண்டு நிறுவனங்களினதும் பாது காப்பைக் காரணங்காட்டி கிளிநொச்சியில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றியது. ஆனால் வன்னியில் வாழும் இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு உத்தரவாதமும் வழங்கப்படவில்லை.

அவர்கள் இன்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்வதா சாவதா என்ற மனநிலையில் அந்தரித்து நிற்கின்றனர்.

போரை நடத்தி வெற்றி பெறலாம், அரசியலை நடத்தலாம், ஆனால் அதை அனுபவிக்க மக்கள் உயிரோடு இருக்க வேண்டும். அதற்காக மக்களை பாதுகாத்தே ஆக வேண்டும்.

உணவு விடயத்தை அரசாங்கமோ புலிகளோ ஓர் ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது. வன்னிக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் தடை விதிக்கக் கூடாது.

மூர்க்கத்தனமான விமானத் தாக்குதல்களால் பொதுமக்கள் அநியாயமாக பலியாகின்றனர். குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என்ற பேதமில்லாமல் கொல்லப்படுகின்றனர்.

உயிருக்குஉலை வைக்கும் இந்த மிருகத்தனமான செயலை உலக மக்களால் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறான செயல்களை தொடர அனுமதிப்பது ஆபத்தாகவே முடியும். சமாதானத்தை விரும்பும் மனித இதயம் உள்ளவர்கள் இதற்கு தமது கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

வன்னியில் பொதுமக்கள் பயணிக்கும் வாகனங்கள் கிளைமோர் தாக்குதல் நடத்தப்படுகின்றது. இதனால் சொந்த மக்களே படுகொலை செய்யப்படுகின்றனர். வவுனியா வடக்கு மாந்தைமேற்கு மடு ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 2 இலட்சத்து 10 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து வன்னியில் தஞ்சமடைந்துள்ளனர். கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்தவர்களுமாக சுமார் மூன் றரை இலட்சம் மக்கள் வன்னியில் இருக்கின்றனர்.

அகதிகளாக வன்னிக்கு சென்ற மக்கள் இன்று மர நிழல்களிலும் குடில்களிலும் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி மிகவும் பரிதாபகரமான நிலையிலே வாழ்ந்து வருகிறார்கள். பலமுறை இடம்பெயர்ந்த அவர்களை விமானங்களில் துரத்தி துரத்தி அடிப்பது எந்த வகையில் நியாயமாகும். இடம்பெயர்ந்த ஆண்கள் மெலிந்த உடலுடன் கைகளில் பைகளை வைத்துக் கொண்டு உணவுக்காக அலைவது மிகவும் பரிதாபகரமான நிலைமை ஆகும்.

விமானங்களைக் கண்டால் சிறியவர் முதல் பெரியவர் வரை தம் உயிரை பாதுகாத்து கொள்ள ஓடி ஒளிந்து கொள்ள வேண்டிய நிலையே இன்று வன்னியில் காணப்படுகிறது. இதனால் அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்ட மன நோயாளிகள் போலவே நடமாடி திரிகின்றனர்.

இலங்கையில் தமிழ் மாநிலம் வேண்டும் - மனோகணேசன் எம்.பி

PDF

இலங்கைக்கு சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தொடர்ந்து தாராளமாக ஆயுதங்களை வழங்குகின்றன;

இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக அந்நாடுகள் மறைமுகமாக நிழல் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளன என்று இலங்கை தமிழ் எம்.பி. மனோ கணேசன் தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது:

இலங்கை இனப் பிரச்னை என்பது தமிழ்பேசும் மக்களின் வாழ்வுரிமை பிரச்னையாக மட்டுமே கருதப்பட வேண்டும். ஆனால், இப் பிரச்னையை விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையது என்று கருதுவது துரதிர்ஷ்டமானது ஆகும்.

இலங்கையில் தமிழ் மொழி, தமிழ் மக்களுக்கு எவ்வித அந்தஸ்தும் வழங்கப்படவில்லை.

இலங்கையில் அரசுப் படையினரின் மனித உரிமை மீறல்களால், இதுவரை 75 ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். போரில் 20 ஆயிரம் விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாயமாகிவிட்டனர்.

தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சிங்களர்களை அரசு கட்டாயமாக தொடர்ந்து குடியேற்றம் செய்து வருகிறது. இதனால், சொந்த நாட்டிலேயே தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வருகின்றனர்.

இலங்கை அரசுக்கு, சீனாவும், பாகிஸ்தானும் தொடர்ந்து ஆயுதங்களையும், ராணுவ உதவிகளையும் தாராளமாக வழங்கி வருகின்றன.

இலங்கையில் தங்களது நிலைகளை வலுப்படுத்தவே இவ்விரு நாடுகளும் விரும்புகின்றன. இலங்கையில் போர் ஓய்வதையோ அல்லது அமைதி ஏற்படுவதையோ இந்நாடுகள் விரும்பவில்லை. இந்தியாவுக்கு எதிரான நிழல் யுத்தத்தை இந்த நாடுகள் தொடர்ந்து நடத்துகின்றன.

எனவே, பாகிஸ்தானுக்குப் பதிலாக இந்தியா ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கக் கூடாது.

அதிகாரப் பகிர்வு திட்டம் இதுவரை நடைமுறைப் படுத்தப்படவில்லை.

தனி ஈழம் என்பது புலிகள் உள்ளிட்டோரது கோரிக்கையாக இருக்கலாம். இதை ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உள்பட நாங்கள் ஆதரிக்கவில்லை.

இலங்கையில் தமிழ் மாநிலம் வேண்டும்:

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனில், தமிழ்நாட்டைப் போல மொழிவாரி மாநிலத்தை அமைக்க இலங்கை அரசு முன்வர வேண்டும். இல்லையெனில், இலங்கை பிளவுபடுவதை யாராலும் தடுக்க இயலாது.

இலங்கை அதிபர் ராஜபக்சய, ஐ.நா. சபையில் தமிழில் பேசினால் மட்டும் போதாது. தமிழ் மக்கள் மீதான தாக்குதலை விடுத்து அவர்களின் மனங்களை வெல்ல வேண்டும்.

தமிழர்களை இனப்படுகொலை செய்வதன் மூலம் தமிழர் பிரச்னைக்கு ராணுவத் தீர்வு காண இலங்கை அரசு விரும்புகிறது. இது ஒருபோதும் வெற்றி பெறாது. இருந்தாலும், தமிழர் பிரச்சினைக்கு, தருமத்தின் அடிப்படையில் நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,

தமிழக மீனவர்கள் மீது புலிகள் யாரும் தாக்குதல் நடத்தவில்லை. இலங்கை கடற்படையினர் தான் தாக்குகின்றனர்.

தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு அடையாள அட்டை வழங்குவது சரியானது அல்ல. கச்சத் தீவை மீட்பது குறித்து தமிழகத் தமிழர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

சிரிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தால், இலங்கையில் உள்ள இந்திய வம்சாவழி தமிழர்களின் பலம் நாடாளுமன்றத்தில் குறைந்துவிட்டது.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் நிரந்தரத் தீர்வு காண இந்திய அரசு உதவ வேண்டும் என்றார் மனோ கணேசன்.