வன்னியில் விமானப் படையினர் புதிய வகை எரிகுண்டுகளை வீசுகின்றனர்

வன்னிப் போர்முனையில் தற்போது விமானப் படையினர் புதிய வகை எரிகுண்டுகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

கடந்த இரண்டு மாதங்களாக நாச்சிக்குடா தொடக்கம் அக்கராயன் வரையிலுமான களமுனைகளில் கடுமையான எதிர்த் தாக்குதல்களை சந்தித்து வருகின்ற படையினரின் முன் நகர்வுகள் மந்த நிலையை அடைந்து வருவதனைத் தொடர்ந்து அரசு புதிய வகையான திரவ எரிகுண்டுகளை விமானப்படை விமானங்கள் மூலம் வன்னிப்பெரு நிலப்பரப்பில் வீசத் தொடங்கியுள்ளது.

விமானப் படை கடந்தவாரம் இத்தகைய குண்டுகளை கிளிநொச்சி மற்றும் அக்கராயன் களமுனைகளை அண்டிய பகுதிகளில் வீசியுள்ளது. இக்குண்டுகளினால் ஏற்பட்ட தாக்கங்கள் தொடர்பாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

விமானத்திலிருந்து வீசப்படும் இக்குண்டுகள் தரையில் மோதி வெடித்ததும் பாரிய நெருப்புக் கோளங்களை உருவாக்குவதுடன் வெடிக்கும் சுற்றாடலில் இருந்து வாயுக்களையும் அகற்றும் தன்மை கொண்டது. எனவே, அப்பகுதியில் வசிப்பவர்கள் மூச்சுத்திணறி உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்படும்.

தாக்குதல் நடத்தப்பட்டதும் ஒருவர் உயிரிழக்காவிட்டாலும் பாரிய பதுங்கு குழிகளுக்கு வெளியில் இந்தக் குண்டுகள் வீழ்ந்து வெடித்தால் பதுங்கு குழிகளினுள் இருப்பவர்களின் சுவாசப் பையினுள்ளி ருக்கும் ஒட்சிசனைக் கூட உறிஞ்சி வெளியேற்றிவிடுமென்பதால் அவர் மரணமடையும் நிலையேற்படும்

சனிக்கிழமை கிளிநொச்சியில் வீசப்பட்ட விமானக் குண்டுகளால் எண்மர் பலத்த எரிகாயங்களுக்குள்ளாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் குழந்தைகளும் அடங்கும்.

நான்காவது ஈழப்போரில் விமானப்படை, பதுங்குகுழிகளை தகர்க்கும் கனரக குண்டுகளைப் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது எரி குண்டுகளை பயன்படுத்த தொடங்கியுள்ளது.

அக்கராயன் மற்றும் வவுனிக்குளம் பகுதிகளில் முன் நகர்வில் ஈடுபட்ட படையினர் மீது விடுதலைப்புலிகள் "சி.எஸ்.' எனப்படும் நச்சுவாயுவைப் பயன்படுத்தியதாக அரசு பிரசாரங்களை கட்டவிழ்த்து விட்ட சில நாட்களில் எரிகுண்டுகளை வன்னிப்பெரு நிலப்பரப்பின் மீது விமானப்படை விமானங்கள் வீசத் தொடங்கியுள்ளதானது பலத்த சந்தேகங்களை தோற்றுவித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: