தமிழீழக் கதவுக்கான சாவி உலகத்தமிழன் ஒவ்வொருவனின் கைகளிலும் உள்ளது - சீமான்

தமிழகத்தில் அரசியல் கருத்து வேறுபாடுகளைக்களைந்துவிட்டு, தமிழனம் என்ற உணர்வோடு அனைவரும் ஒரு மையத்தில் இணைவேண்டும் என்பது அண்ணன் பிரபாகரனின் ஆசையாகும் என தமிழ்த்திரைப்பட இயக்குனரும், தமிழ் உணர்வாளருமான சீமான் தெரிவித்துள்ளார்.குமுதம் சஞ்சிகைக்கு அவர் வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார், அந்த செவ்வியில் மேலம் கருத்துக்களை தெரிவித்திருந்த அவர், தமிழ் ஈழத்துக்கான கதவுகள் மூடப்பட்டிருக்கின்றன, அனால் அவற்றுக்கான திறவுகோல்கள் உலகத்தமிழன் ஒவ்வொருவனுடைய கைகளிலும் உள்ளன.எனவே நாம் அனைவரும் ஒன்றுபட்டு அந்தக்கதவை திறக்கவேண்டிய பெரும் கடமையுடையவர்களாக உள்ளோம்.ஈழத்தில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் தமிழன் மரணத்தைச் சந்தித்துவருகின்றான். உணவு மற்றும் மருத்துவம், அடிப்படை வசதிகள் இன்றி அங்கு தமிழினம் அவதிப்படுகின்றது.இந்த நிலையில் தாய்த்தமிழகத்தில் இருந்து என்ன முயற்சிகள் செய்துகொண்டிருக்கின்றார்கள் என ஈழத்தமிழர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இங்கோ தி.மு.க அரசு கூட்டிய அனைத்துக்கட்சிக்கூட்டத்தை சில கட்சிகள் புறக்கணித்தன.அ.தி.முக. புறக்கணித்ததில் எவருக்கும் எந்த வியப்பும் இல்லை. ஆனால் ம.தி.மு.க செயலாளர் வைக்கோ அதை புறக்கணித்ததுதான் உலகத்தமிழதையே திடுக்கிடவைத்துள்ளது.அ.தி.முக. எப்போதும் ஈழத்தமிழர்களுக்கு எதிர்ப்பு நிலையிலேயே இருக்கின்றது. ஆனால் அவர்களோடு இணைந்து ம.தி.முக. புறக்கணித்தது என்பதுதான் வேதனையாக உள்ளது.முதல்வர் கருணாநிதியுடன் ஏற்பட்ட அரசியல்க் காரணங்களுக்காக பா.ம.க தி.முக. கூட்டணியில் இருந்து விலகியது. இருந்தும் ஈழத்தமிழர்களுக்கான விடயம் என்பதால் மருத்துவர் ராமதாஸ் அந்தக்கூட்டத்தைப் புறக்கணிக்காமல் கலந்துகொள்ளவில்லையா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதாவின் கனவு பலிக்காது!! - கனிமொழி ஆவேச பேட்டி

இலங்கையில் போர் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழகத்தில் அது தொடர்பாக பற்பல சரேல் திருப்பங்கள். முதலில் சி.பி.ஐ. கட்சி நடத்திய உண்ணாவிரதம். அதில் அ.தி.மு.க. தவிர்த்து பல முக்கிய கட்சிகள் முகம் காட்டின. அதைத் தொடர்ந்து மயிலை மாங்கொல்லையில் தி.மு.க. சார்பில் ஒரு பிரமாண்ட பொதுக்கூட்டம். அதன்பின் ம.தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டம். அதையடுத்து தி.மு.க. அரசு சார்பில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் என ஏகப்பட்ட திடீர்த் திருப்பங்கள்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இருபத்தேழு கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தும், அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க. போன்றவை அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டன. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ``இலங்கையில் இன்னும் இரண்டு வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும். அப்படி நிர்ப்பந்திக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விடுவார்கள்'' என்று ஒருமனதாகத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.இந்தத் தீர்மானம் நிறைவேறிய மறுநாளே, முதல்வர் கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை எம்.பி.யுமான கனிமொழி அவரது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்ற தகவல் பரபரவென பரவியது. இம்மாதம் 29-ம் தேதியிட்ட அந்த ராஜினாமா கடிதத்தை கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் கொடுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.அதன் எதிரொலியாக `அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கனிமொழி மீது ஒரு வசை கணையை வீசினார். `கனிமொழியின் ராஜினாமா என்பது ஒரு வடிகட்டிய மோசடி. ராஜினாமா கடிதத்தின் காகிதத்தின் மதிப்புக்கூட அவரது ராஜினாமாவுக்கு இல்லை' என வசைமாரி பொழிந்துள்ளார்.இதுதொடர்பாக நாம் கனிமொழியிடம் விளக்கம் கேட்டுத் தொடர்பு கொண்டபோது, முதலில் பேசத் தங்கியவர், சிறிது நேரத்திற்குப் பின்னரே பேச முன்வந்தார்.

வழக்கமாக கனிவான குரலில் பேசும் அவர், இந்த முறை கோபம் கொப்புளிக்க நம்முடைய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

ஈழத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு இரண்டு வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய முன் வராவிட்டால் லோக்சபா உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வார்கள் என்றுதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில் ராஜ்யசபா எம்.பி.யான நீங்கள் ஏன் திடீரென ராஜினாமா செய்தீர்கள்?
``ராஜ்யசபா எம்.பி.க்களும் பதவி விலகுவார்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, `அவர்களுக்கும் இது பொருந்தும்' என்று தலைவர் பதிலளித்துள்ளார். அதனால்தான் முன்கூட்டியே ராஜினாமா கடிதம் கொடுத்தேன்.''

மத்திய அரசிற்கு இரண்டு வார காலம் அவகாசம் கொடுத்துள்ள நிலையில், நீங்கள் உடனே ராஜினாமா செய்தது `சுய விளம்பரத்திற்காக' என்று கூறப்படுகிறதே?
``நான் சுய விளம்பரம் தேடிக்கொள்வதாக இருந்தால் பத்திரிகையாளர்களை அழைத்துக் கொண்டுபோய் அவர்கள் முன்னிலையில் அல்லவா ராஜினாமா கடிதம் கொடுத்திருக்க வேண்டும்? நான் ராஜினாமா கடிதத்தைத் தலைவரிடம் கொடுத்தபோது எடுத்த படம் ஏதாவது எந்தப் பத்திரிகையிலாவது வந்துள்ளதா? இல்லையே! இந்த நிலையில் இதில் சுய விளம்பரம் தேட என்ன உள்ளது?

'' மத்திய அமைச்சர் அன்புமணியின் பதவிக்கு நெருக்கடி ஏற்படுத்தத்தான், நீங்கள் ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறதே?
``மற்றொரு கட்சியில் உள்ள எம்.பி.யை ராஜினாமா செய்யச் சொல்லி எப்படி நிர்ப்பந்திக்க முடியும்? அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படியும், எங்கள் தலைவர் அறிவித்ததாலும் நான் ராஜினாமா செய்தேன். அதுபோல், அவர்களது கட்சி முடிவுப்படி அவர்கள் செயல்படுவார்கள்.

''இலங்கைத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால், ராஜினாமா கடிதத்தை கனிமொழி ராஜ்யசபா தலைவரிடம் அல்லவா கொடுத்திருக்க வேண்டும்? அதை விடுத்து அவரது தந்தையிடம் கொடுத்ததால் எழுதப்பட்டிருக்கிற காகிதத்தின் மதிப்புக்கூட அவரது ராஜினாமாவிற்குக் கிடையாது என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?
``நான் ராஜினாமா கடிதத்தில் என்ன எழுதியுள்ளேன் என்று அவர் நேரடியாக வந்து படித்துப் பார்த்தாரா? என்ன அர்த்தத்தில், எந்த ஆதாரத்தில் இப்படிப் பேசுகிறார் என்று தெரியவில்லை. ராஜ்யசபா தலைவருக்கு முகவரியிடப்பட்ட கடிதத்தைத்தான் எங்கள் கட்சித் தலைவரிடம் கொடுத்துள்ளேன். அதனை, ராஜ்யசபா தலைவருக்கு அவர்கள் அனுப்பி விடுவார்கள். எனக்கு தலைமையை மீறி செயல்பட்டுப் பழக்கமில்லை.'
'`லோக்சபாவிற்கு முன் கூட்டியே தேர்தல் வந்தால், எம்.பி.க்களின் பதவிக்காலம் மூன்று மாதங்களில் முடிந்து விடும். எனவே, இன்னும் முப்பது மாதங்கள் பதவிக்காலம் இருக்கின்ற எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வோம் என்று ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை? என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?
``இந்தக் கேள்வி, `சட்டசபைக்குத் தேர்தல் வராதா?' என்ற ஜெயலலிதாவின் ஆசையைத்தான் காட்டுகிறது. எப்படியாவது சட்டசபைக்குத் தேர்தல் வந்து அதில் வெற்றி பெற வேண்டும் என்ற அவரது கனவு பலிக்காது. ஈழத்தமிழர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆதரவாகக் குரல் கொடுத்த ஜெயலலிதா, தற்போது முற்றிலும் முரண்பாடாகப் பேசுகிறார். இதுதான் சந்தர்ப்பவாதம்.''1980-ல் தமிழீழத்திற்காகக் குரல்கொடுத்த கருணாநிதி, தற்போது, தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கத் தயங்குகிறார் என்று ராமதாஸ் கூறியுள்ளாரே?``அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பா.ம.க. தலைவர் கோ.க.மணி கலந்துகொண்டு,முதல்வர் கருணாநிதி எடுத்த முடிவுகளைப் பாராட்டியுள்ளாரே?''
இரா. முருகேசன்

"எங்கட சோகம்..." - ஈழத்து நிலையை சொல்கிறார் இலங்கை எம்.பி.--ஜூனியர் விக

''ஈழப் பிரச்னைத் தீர்வுக்காகத் தமிழக எம்.பி-க்கள் கூண்டோடு ராஜினாமா செய்யவும் தயங்க மாட் டார்கள்'' என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி அதிர்வோடு அறிவித்த செய்தி,
மத்திய அரசின் கவனத்தை உலுக்கி இருக்கிறது. இதற்கிடையில், தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஈழ நிலைமையை விளக்குவதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் தமிழ் எம்.பி-யான சுரேஷ் பிரேமச்சந்திரன் சென்னை வந்திருந்தார்.

அவரை நாம் சந்தித்தோம்.
''எங்கட மண்ணின் இன்னல் தீர்க்க தமிழக முதல் வரும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒருசேர கைகோத்திருப்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இதன்மூலம் எங்கட பலம் வலுப்பட்டிருக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக மருத்துவர் ராமதாஸ், நெடுமாறன், பண்ருட்டி ராமச்சந்திரன், இடதுசாரித் தலைவர்கள், திருமாவளவன் உள்ளிட்ட பலரையும் சந்தித்துப் பேசினேன்.
இப்போது அடுத்தகட்டமாகப் பிரதமரையும் சந்தித்துப் பேசுகிற முடிவில் இருக்கிறேன். அனைத்துக் கட்சித் தலைவர்களும் சேர்ந்து எடுத்திருக்கிற ஒத்துணர்வான முடிவு, இந்திய அரசுக்கு எச்சரிக்கையாக அமையும். ஈழ பிரச்னையில் சுமுகச் சூழலை ஏற்படுத்த வேண்டிய கடமை இந்திய அரசுக்கு இருக்கிறது. அந்தக் கடமை நிறைவேற்றப்பட, தமிழகத் தலைவர்கள்தான் துணை நிற்க வேண்டும். இப்போது தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் உணர்வுப்பூர்வமான ஒத்துழைப்பும் கைகொடுப்பும் எங்கட தமிழர்களுக்கு உறுதியான விடிவைக் கொடுக்கும்'' என பீறிட்ட நெகிழ்வுடன் பேசத் தொடங்கினார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

''ஈழத்தின் இப்போதைய நிலைபற்றி பலவாறான செய்திகள் வருகின்றன. அங்குள்ள உண்மையான நிலை என்ன?''
''சிங்கள ராணுவத்தின் இனஅழிப்பு வெறி உச்சகட்ட மாகி விட்டது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்பதைவிட, ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் வேர றுக்கும் கொடூரப் போரை நடத்திவருகிறது சிங்கள அரசு. ஒரு பொத்தானை அழுத்தினால், எழுபதுக்கும் மேற்பட்ட குண்டுகளை உமிழும் பல்குழல் பீரங்கிகளையும், சீனா, பாகிஸ்தான் போன்ற வேற்று தேசங்களின் நவீன ராணுவக் கருவிகளையும் கொண்டு, தமிழர் பகுதிகளை சல்லடையாக்கிக் கொண்டிருக்கிறது சிங்கள ராணுவம். கிளிநொச்சியில் குண்டு மழை பொழிந்து, தமிழர்களை ஒட்டுமொத்தமாக விரட்டி அடித்துவிட்டனர்... இன்றைக்கு கிளிநொச்சியில் ஒரு தமிழ் ஜீவன் கூட இல்லை. அந்த நகரமே தரைமட்டமாகி விட்டது. சிங்கள ராணுவத்தின் கொடூரத்துக்குப் பயந்து, பாதுகாப்பான பகுதிகளுக்கு ஓடும் சனங்கள், அங்கேயும் அண்ட நிழலில்லாமல், பாம்புக் கடிக்கும் பசிக் கொடுமைக்கும் ஆளாகி உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். விவசாயத்தையும் மீன் பிடிப்பையும் நம்பி உழைத்து வாழ்ந்த எங்கட சனங்கள், ஒரு சாண் வயிற்றுக்காகப் பிறர் கைகளை எதிர்நோக்கி வாழ வேண்டிய இக்கட்டுக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள். மீன்பிடிப்புக்கு முழுசும் தடை போடப்பட்டு விட்டது. வைத்திய சாலைகள் மூடப்பட்டு விட்டன. தமிழ் சனங்கள் அனுபவிக்கும் கொடுமைகளை வாய்வார்த்தைகளால் சொல்லி மாளாது!''

''ஐ.நா-வின் தொண்டு நிறுவனங்கள் மற்றும் செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் தமிழர்களுக்கு உதவவில்லையா?''
''ஐக்கிய நாட்டு சபையின் தொண்டு நிறுவனங்கள், மூன்று வாரங்களுக்கு முன்னரே இலங்கையை விட்டு வெளியேறி விட்டன. சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மட்டும்தான் இப்போது இலங்கையில் இருக்கிறது. அதுவும் சுடப்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் புலிகளின் பிணங்களை அள்ளிச்செல்லும் வேலையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது... எங்கட மக்களின் சிரமங்களுக்கு அவை ஏதும் செய்யவில்லை. இப்போதைய எங்களின் ஒரே எதிர்பார்ப்பு தமிழகத்தை நோக்கித்தான். குண்டடிப்பட்டும், கொடூரமாகக் குதறப்பட்டும் கிடக்கிற எங்கட மக்களுக்குத் தமிழகத்தின் உதவியால்தான் விடிவு பிறக்கும். ஈழ மண்ணில் தோராயமாக 35 லட்சம் தமிழ் வாழ் சனங்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கும் கோடிக்கணக்கான தமிழர்களின் ஒருவிரல் எமை நோக்கி நீண்டால்கூட போதும்... எங்களின் இன்னல்கள் களையப்பட்டு விடும்!''

''விடுதலைப்புலிகளுக்குப் பெரும் பின்னடைவு என்று வரும் செய்திகள் பற்றி..?''
''சந்திரிகா காலத்தில் ஒரு வருடமாகப் போராடி சிங்கள ராணுவம், புலிகளின் மண்ணை 20 கிலோமீட்டர் தூரம் கடந்தது. அப்படி பிடித்த மண்ணை, அடுத்த சில மணி நேரங்களிலேயே மீட்டெடுத்தனர் புலிகள். இதுநாள்வரை ஆறாயிரம் முறை சிங்கள ராணுவம் விமானத் தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. அவற்றை எதிர்கொள்கிற அசாத்திய பலம் புலிகளிடம் இருந் திருக்கிறது... நாங்கள் அறிந்தவரை, கெரில்ல தாக்குதலை வைத்தே இன்னும் ஐம்பது வருடங்களுக்கும் மேல் சிங்கள அரசுக்குப் புலிகளால் சவாலைக் கொடுக்க முடியும். சிங்கள அரசும் புலிகளும் சொல்லும் போர் நிலவரங்களைத் தவிர்த்துவிட்டு, உண்மையை ஆராய்ந் தால்தான் ராணுவத்துக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பு புரியும். அதிலும், கடந்த இரண்டு வாரங்களாக சிங்கள ராணுவத்தால் ஒர் அடியைக்கூட எடுத்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. புலிகளின் உயிருணர்வுப் போராட்டத்துக்கு முன், சிங்கள அரசின் வெறித்தனப் போக்கு ஒருபோதும் வெல்லாது!''

''தாங்கள் சந்தித்த தமிழகத் தலைவர்களிடம் என்ன கோரிக்கை வைத்தீர்கள்?''
''அங்கே எங்கள் தமிழ் சகோதரிகள் விதவைகளாகவும், முதிர் கன்னிகளாகவும் தத்தளித்துக் கிடக்கிறார்கள். தாய், தகப்பன் மரிக்கிறபோது சம்பிரதாயங்களை எல்லாம் தாண்டி, வேறு கதியற்று, பெண்களே கொள்ளி வைக்கிறார்கள். தமிழ்ப் பண்பாடும், கலாசாரமும் பூண்டோடு அழிக்கப்படுகிறது. வாரிசற்ற சமூகமாக எங்கள் மண் மாறுவதற்குள், தக்க தீர்வு ஏற்பட வேண்டும். அது எங்களின் தொப்புள்கொடி சொந்தமான தமிழகத்தின் கையில்தான் இருக்கிறது. இதைத்தான் நான் சந்திக்கும் ஒவ்வொரு தலைவரிடமும் வலியுறுத்தி சொல்லிவருகிறேன்'' என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
பரிதவிப்பில் கனத்துப் போயிருந்த அவருடைய விழிகளில், விடியலுக்கு ஏங்கும் ஈழ மண்ணின் ஏக்கம் இழையோடியது.

நன்றி: ஜூனியர் விகடன், Oct 22, 2008