இலங்கையின் இனப்பிரச்சினை என்பது தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினையாகும்.

இலங்கைக்கு, பாகிஸ்தானும் சீனாவும் தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இதனூடாக இந்தியாவுக்கு எதிராக மறைமுகமாக ஒரு நிழல் யுத்தத்தை அவை நடாத்துகின்றன என மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தமிழ் நாட்டில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினை என்பது தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினையாகும். ஆனால் அதனை விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையது என்று கருதுவது துரதிர்ஸ்டவசமானது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு, தமிழ் மொழிக்கு எதுவித அந்தஸ்தும் வழங்கப்படவில்லை. இலங்கையில் அரச படையின் மனித உரிமை மீறல்களால் இதுவரை 75ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 20ஆயிரம் விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போய்விட்டனர்.

தமிழ் மக்களின் பிரதேசங்களில் கட்டம் கட்டமாக சிங்கள மக்களைக் கொண்டு சென்று அரசு குடியேற்றுகிறது. சொந்த நாட்டிலேயே தமிழ் மக்கள் இடம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

இலங்கை அரசுக்கு சீனாவும் பாகிஸ்தானும் தொடர்ந்து ஆயுதங்களையும் இராணுவ உதவிகளையும் தாராளமாக வழங்கி வருகின்றன. இலங்கையில் தங்களது நிலைகளை வலுப்படுத்தவே இவ்விரு நாடுகளும் விரும்புகின்றன. போர் ஓய்வதையோ அமைதி ஏற்படுவதையோ அவை விரும்பவில்லை.. இந்தியாவுக்கெதிரான நிழல்யுத்தத்தை இவ்விரு நாடுகளும் நடாத்துகின்றன.

எனவே பாகிஸ்தானுக்குப் பதிலாக இந்தியா இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கக் கூடாது. அதிகாரப்பகிர்வுத் திட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. தமிழ் ஈழம் என்பது புலிகளின் கோரிக்கையாக இருக்கலாம் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டுமெனில் தமிழ்நாட்டைப்போல மொழிவாரி மாநிலத்தை அமைக்க இலங்கை அரசு முன்வர வேண்டும். இல்லையேல் நாடு பிளவுபடுவதைத் தவிர்க்க இயலாது. சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் இலங்கைப் பாராளுமன்றில் மலையக மக்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: