வரும் வாரங்கள், நாட்கள் நான்காம் கட்ட ஈழப்போரின் உச்சக்கட்டமாக இருக்கும் - இக்பால் அத்தாஸ்


தமிழீழ விடுதலைப்புலிகளின் பலமான இடமாகிய வன்னியின் கதவடியில் தற்போது இலங்கைப் படையினர் இருப்பதாகவும் அவர்கள் இந்த வாரம் கிளிநொச்சியை நோக்கி தாக்குதல்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் போரியல் ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியின் 85 வீதமான மக்கள் தற்போது தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வன்னிக்கான உணவுகளை கொண்டு சுமார் 60 பாரஊர்திகள் தற்போது அங்கு செல்வதற்கு தயராகவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த உணவு வாகனத் தொடரணி செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் அதனைக் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு அச்சம் இருப்பதை உணரமுடிகிறது. எனவே ஏ 9 வீதியில் செல்லவுள்ள இந்த வாகனத் தொடரணி பின்னர், கிழக்குப்புறமாக தமது பாதையை மாற்றிச் செல்லவே ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தநிலையில் அடுத்துவரும் வாரத்தில் வன்னியில் பாரிய மோதல்கள் இடம்பெறப்போவதை உணரமுடிகிறது. மணலாற்றிலிருந்து முன்னேறும் படையினருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலக்கண்ணிகள் பாரிய தடைகளை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் மோதல்கள் ஏற்படும் போது அதற்கு மாற்றாக கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல்களை நடத்துவர் என்ற நிலை காணப்படுகிறது எனினும் இதனைத் தான் சமாளிக்கமுடியும் என படைத்தரப்பு தெரிவித்துள்ளதாக இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கிழக்கில் தற்போது கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் படையினருக்கு உதவி வருகின்றனர்.

இதேவேளை வருகின்ற நாட்கள், வருகின்ற வாரங்கள் நான்காவது கட்டஈழப்போரில் பாரிய மோதல்கள் ஆரம்பமாகப் போவதையே இன்றைய களநிலவரங்கள் எடுத்துக்காட்டுவதாக இக்பால் அத்தாஸ் எதிர்வு கூறியுள்ளார்.

No comments: