இலங்கையில் தமிழ் மாநிலம் வேண்டும் - மனோகணேசன் எம்.பி

PDF

இலங்கைக்கு சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தொடர்ந்து தாராளமாக ஆயுதங்களை வழங்குகின்றன;

இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக அந்நாடுகள் மறைமுகமாக நிழல் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளன என்று இலங்கை தமிழ் எம்.பி. மனோ கணேசன் தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது:

இலங்கை இனப் பிரச்னை என்பது தமிழ்பேசும் மக்களின் வாழ்வுரிமை பிரச்னையாக மட்டுமே கருதப்பட வேண்டும். ஆனால், இப் பிரச்னையை விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையது என்று கருதுவது துரதிர்ஷ்டமானது ஆகும்.

இலங்கையில் தமிழ் மொழி, தமிழ் மக்களுக்கு எவ்வித அந்தஸ்தும் வழங்கப்படவில்லை.

இலங்கையில் அரசுப் படையினரின் மனித உரிமை மீறல்களால், இதுவரை 75 ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். போரில் 20 ஆயிரம் விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாயமாகிவிட்டனர்.

தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சிங்களர்களை அரசு கட்டாயமாக தொடர்ந்து குடியேற்றம் செய்து வருகிறது. இதனால், சொந்த நாட்டிலேயே தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வருகின்றனர்.

இலங்கை அரசுக்கு, சீனாவும், பாகிஸ்தானும் தொடர்ந்து ஆயுதங்களையும், ராணுவ உதவிகளையும் தாராளமாக வழங்கி வருகின்றன.

இலங்கையில் தங்களது நிலைகளை வலுப்படுத்தவே இவ்விரு நாடுகளும் விரும்புகின்றன. இலங்கையில் போர் ஓய்வதையோ அல்லது அமைதி ஏற்படுவதையோ இந்நாடுகள் விரும்பவில்லை. இந்தியாவுக்கு எதிரான நிழல் யுத்தத்தை இந்த நாடுகள் தொடர்ந்து நடத்துகின்றன.

எனவே, பாகிஸ்தானுக்குப் பதிலாக இந்தியா ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கக் கூடாது.

அதிகாரப் பகிர்வு திட்டம் இதுவரை நடைமுறைப் படுத்தப்படவில்லை.

தனி ஈழம் என்பது புலிகள் உள்ளிட்டோரது கோரிக்கையாக இருக்கலாம். இதை ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உள்பட நாங்கள் ஆதரிக்கவில்லை.

இலங்கையில் தமிழ் மாநிலம் வேண்டும்:

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனில், தமிழ்நாட்டைப் போல மொழிவாரி மாநிலத்தை அமைக்க இலங்கை அரசு முன்வர வேண்டும். இல்லையெனில், இலங்கை பிளவுபடுவதை யாராலும் தடுக்க இயலாது.

இலங்கை அதிபர் ராஜபக்சய, ஐ.நா. சபையில் தமிழில் பேசினால் மட்டும் போதாது. தமிழ் மக்கள் மீதான தாக்குதலை விடுத்து அவர்களின் மனங்களை வெல்ல வேண்டும்.

தமிழர்களை இனப்படுகொலை செய்வதன் மூலம் தமிழர் பிரச்னைக்கு ராணுவத் தீர்வு காண இலங்கை அரசு விரும்புகிறது. இது ஒருபோதும் வெற்றி பெறாது. இருந்தாலும், தமிழர் பிரச்சினைக்கு, தருமத்தின் அடிப்படையில் நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,

தமிழக மீனவர்கள் மீது புலிகள் யாரும் தாக்குதல் நடத்தவில்லை. இலங்கை கடற்படையினர் தான் தாக்குகின்றனர்.

தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு அடையாள அட்டை வழங்குவது சரியானது அல்ல. கச்சத் தீவை மீட்பது குறித்து தமிழகத் தமிழர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

சிரிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தால், இலங்கையில் உள்ள இந்திய வம்சாவழி தமிழர்களின் பலம் நாடாளுமன்றத்தில் குறைந்துவிட்டது.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் நிரந்தரத் தீர்வு காண இந்திய அரசு உதவ வேண்டும் என்றார் மனோ கணேசன்.

No comments: