காத்தான் குடிக்கு ஆடுவிக்கச் சென்று காணாமல் போனவர் உருக்குலைந்த சடலமாக மீட்பு

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு ஆடுவிற்கச் சென்று காணாமல் போன இரு இளைஞர்களி;ல் ஒருவர் சடலமாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை அம்பாறை நிந்தவூர்க் கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் இவர்களில் ஒருவருடையது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி ஆரையம்பகுதி பகுதியிலிருந்து கே.துஷாந்தன் (25) லோகநாதன் சுரேஷ் (16) ஆகிய இரண்டு இளைஞர்களும் ஆடு விற்பதற்காகக் காத்தான்குடிக்குச் சென்ற போது காணாமல் போயினர்.


இவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதியதால் இவர்களை விடுவிக்கக் கோரி ஆரையம்பதியிலும் பின்னர் மட்டக்களப்பிலும் கடையடைப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது. இவர்களை ஆயுதக்குழுவொன்றே கடத்தியதாக ஆரையம்பதி மக்கள் கூறிவந்த நிலையில் காணாமல் போன இருவரில் ஒருவரது சடலம் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் நிந்தவூர் வைத்தியசாலைவீதிக் கடற்கரைப்பகுதியில் மிகவும் பழுதடைந்த நிலையில் கரையொதுங்கியது.


சடலம் பழுதடைந்திருந்த போதிலும் துஷாந்தனின் மைத்துனர் சடலத்தை துஷாந்தனுடையது தான் என அடையாளம் காட்டினார். காத்தான்குடிப் பகுதியில் காணாமல் போனவர்களில் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றையவரின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

No comments: