தியாகதீபம் திலீபனின் நினைவுகள் பற்றி தலைவர்...

எமது விடுதலை இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. அர்ப்பணிப்புக்களைச் செய்திருக்கிறது. இவை எல்லாம் எமது ஆயுதப் போராட்ட வரலாற்றில் நாம் ஈட்டிய வீரசாதனைகள் ஆனால் எனது அன்பான தோழன் திலீபனின் தியாகமோ வித்தியாசமானது. வியக்கத்தக்கது. எமது போராட்ட வரலாற்றில் புதுமையானது. சாத்வீகப் போராட்டக்களத்தில் தன்னைப் பலிகொடுத்து ஈடுஇணையற்ற ஒரு மகத்தான தியாகத்தைத் திலீபன் புரிந்தான்.
அவனது மரணம் ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்ச்சி. தமிழீழப் போராட்ட வரலாற்றில் ஒரு புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி. தமிழீழத் தேசிய ஆன்மாவைத் தட்டி எழுப்பிய நிகழ்ச்சி. பாரத நாட்டைத் தலைகுனியவைத்த நிகழ்ச்சி. உலகத்தின் மனச்சாட்சியை சீண்டிவிட்ட நிகழ்ச்சி.
திலீபன் யாருக்காக இறந்தான்? எதற்காக இறந்தான்? அவனது இறப்பின் அர்த்தமென்ன? அவனது இறப்பு ஏன் ஒரு மகத்தான நிகழ்ச்சியாக மக்கள் எல்லோரையுமே எழுச்சி கொள்ளச் செய்த ஒரு புரட்சிகர நிகழ்ச்சியாக அமைந்தது திலீபன் உங்களுக்காக இறந்தான். உங்கள் உரிமைக்காக இறந்தான். உங்கள் மண்ணுக்காக இறந்தான். உங்கள் பாதுகாப்பிற்காக உங்கள் சுதந்திரத்துக்காக உங்கள் கௌரவத்திற்காக இறந்தான்.

தான் நேசித்த மக்களுக்காக தான் நேசித்த மண்ணுக்காக ஒருவன் எத்தகைய உயர்ந்த உன்னத தியாகத்தைச் செய்ய முடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத்தான் அவன் செய்திருக்கிறான். ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால் உயிரிலும் உன்னத மானது எமது உரிமை. எமது கௌரவம். நான் திலீபனை ஆழமாக நேசித்தேன். உறுதிவாய்ந்த ஒரு இலட்சியப் போராளி என்ற ரீதியில் அவன் மீது அளவு கடந்த பாசம் எனக்குண்டு. அவன் துடிதுடித்துச் செத்துக்கொண்டிருக்கும் பொழுதெல்லாம் என் ஆன்மா கலங்கும். ஆனால் நான் திலீபனை ஒரு சாதாரண மனிதப்பிறவியாகப் பார்க்கவில்லை. தன்னை எரித்துக்கொண்டிருக்கும் ஒரு இலட்சிய நெருப்பாகவே நான் அவனைக் கண்டேன். அதில் நான் பெருமை கொண்டேன். இலட்சிய உறுதியின் உச்சக் கட்டமாக திலீபன் தன்னை அழித்துக்கொண்டான். அவன் உண்மையில் சாகவில்லை. காலத்தால் சாகாத வரலாற்றுப் புருசனாக அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

திலீபனின் மரணம் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித்திருக்கிறது. இது அர்த்தமற்ற சாவு என இந்தியத் தூதர் சொல்லியிருக்கிறார். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? நடந்து கொண்டிருப்பது என்ன? என்பதை மக்கள் அறிந்து கொள்ளவேண்டும். எமது உரிமைகள் வழங்கப்படும், எமது மக்களுக்கும் எமது மண்ணுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும், தமிழ் மக்கள் தமது பாரம்பரிய தாயகப் பூமியில் தம்மைத்தாமே ஆளும் வாய்ப்பு அளிக்கப்படும், இப்படியெல்லாம் பாரத அரசு எமக்கு அளித்த வாக்குறுதிகளை நம்பி நாம் எமது ஆயுதங்களைக் கையளித்தோம். எமது மக்களினதும் மண்ணினதும் பாதுகாப்பை இந்தியாவுக்குப் பொறுப்பளித்தோம்.

அதனையடுத்து என்ன நடைபெற்றது என்பதெல்லாம் எமது மக்களாகிய உங்களுக்குத் தெரியும். தமிழ் அகதிகள் தமது சொந்தக் கிராமங்களுக்குச் செல்ல முடியாது முகாங்களுக்குள் முடங்கிக் கிடக்க சிங்களக் குடியேற்றம் துரிதகதியில் தமிழ் மண்ணைக் கபளீகரம் செய்தது. சிங்கள அரசின் பொலிஸ் நிர்வாகம் தமிழ்ப்பகுதிகளில் விஸ்தரிக்கப்பட்டது.

அவசரஅவசரமாக சிங்கள இனவாத அரசியந்திரம் தமிழ்ப்பகுதிகளில் ஊடுருவியது. சமாதான ஒப்பந்தம் என்ற போர்வையில் சமாதானப்படையின் அனுசரணையுடன் சிங்கள அரச ஆதிக்கம் தமிழீழத்தில் நிலைகொள்ள முயன்றது. இந்த பேராபத்தை உணர்ந்து கொண்ட திலீபன் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி காணத் திட சங்கற்பம் கொண்டான்.

சிங்கள அரசுடன் உரிமை கோரிப் போராடுவதில் அர்த்தமில்லை. பாரதம்தான் எமது இனப்பிரச்சனையில் தலையிட்டது. பாரதம்தான் எமது மக்களின் உரிமைக்கு உத்தரவாதமளித்தது. பாரதம் தான் எம்மிடம் ஆயுதங்களை வாங்கியது. பாரதம்தான் எமது ஆயுதப்போராட்டத்தை நிறுத்திவைத்தது. ஆகவே பாரத அரசிடந்தான் நாம் உரிமை கோரிப் போரிட வேண்டும். எனவேதான் பாரதத்துடன் தர்மயுத்தம் ஒன்றைத் தொடுத்தான் திலீபன். அத்தோடு பாரதத்தின் ஆன்மிக மரபில் பெறப்பட்ட அகிம்சை வடிவத்தை ஆயுதமாக எடுத்துக்கொண்டான்.

மக்களின் ஒன்று திரண்ட சக்தி மூலமே மக்களின் ஒருமுகப்பட்ட எழுச்சி மூலமே நாம் எமது உரிமைகளை வென்றெடுக்கலாம். திலீபனின் ஈடு இணையற்ற தியாகத்திற்கு நாம் செய்யும் பங்களிப்பு இதுதான்."
தலைவரின் உரைகளின் கோப்பிலிருந்து..

No comments: