வன்னி மக்களுக்கு என்ன கொடுக்க விரும்புகிறீர்கள்? எங்களிடம் தாருங்கள் வழங்குகின்றோம்! நோர்வேயிடம் ஜனாதிபதி இப்படித் தெரிவிப்பு

வன்னியில் இராணுவ நடவடிக்கையில் சிக்கியுள்ள மக்களுக்கான நிவாரண உதவிகளை அரசினூடாக முன்னெடுக்குமாறு நோர்வேயை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 63ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மை சந்தித்த வேளையே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
வன்னி மக்களுக்கு உதவுவதற்காக அரசு உறுதியான திட்டமொன்றை வகுத்துள்ளதால் அந்த மக்களுக்கான நிவாரணப் பணிகளை அரசினூடாக முன்னெடுக்க முடியுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வன்னியிலுள்ள மக்களுக்கு எதாவது உதவிகளைச் செய்வதற்கு நோர்வே விரும்பினால் அந்த உதவிகளை இலங்கை அரசிடம் கொடுக்கலாம். நாங்கள் அதனை அவர்களுக்கு வழங்குவோம் என்று நோர்வேத் தரப்பிடம் தெரிவித்தார் ஜனாதிபதி.
இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்து நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான ஜனாதிபதியின் அணுகுமுறை குறித்தும் இந்த சந்திப்பின்போது ஆராயப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தைத் தோற்கடித்த பின்னர் கிழக்கில் அரசு முன்னெடுத்துள்ள திட்டங்கள் அதன் கொள்கைகளைப் புலப்படுத்துகின்றன என்றும் ஜனாதிபதி நேர்வே முக்கியஸ்தர்களிடம் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளிடம் பல தடவைகள் வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் அவர்கள் தொடர்ந்தும் பொதுமக்களைப் பணயக்கைதிகளாகத் தடுத்துவைத்துள்ளனர் எனவும் ஜனாதிபதி நோர்வேயின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார் என்று அவரது அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments: