"நளினி மனுவை மறுபரிசீலனை செய்க' - தமிழக அரசுக்கு நீதிபதி எஸ்.நாகமுத்து உத்தரவு.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய வழக்கில் சிறைத் துறை விதிகளுக்கு உட்பட்டு மனுவை மீண்டும் மறு பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி எஸ்.நாகமுத்து உத்தரவிட்டார்.நளினியை விடுதலை செய்ய முடியாது என்ற தமிழக அரசின் முந்தைய உத்தரவை நீதிபதி ரத்து செய்தார்.

.
1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புத்தூருக்கு வந்தார். மனித வெடிகுண்டில் அவர் பலியானார். இந்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த நளினிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கருணை அடிப்படையில் மரண தண்டனையை ரத்து செய்துவிட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கவர்னர் பிறப்பித்தார்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயிலில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகளை அரசு முன்கூட்டியே விடுதலை செய்து வருகிறது என்றும், ஆனால் 16 ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கும் என்னை மட்டும் விடுதலை செய்யவில்லை என்றும் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் நளினி கூறியிருந்தார்.

நன்னடத்தை அதிகாரி பரிந்துரை செய்தும் ஆலோசனை கமிட்டி அதை பரிசீலிக்காமலேயே என்னை விடுதலை செய்ய மறுத்துவிட்டது என்று மனுவில் கூறியிருந்தார். இதேபோல, இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரும் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை நீதிபதி நாகமுத்து விசாரித்தார். கடுமையான குற்றங்கள் செய்த ஆயுள் தண்டனை குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய இயலாது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. வக்கீல்கள் விவாதம் முடிந்ததால் வழக்கின் தீர்ப்பை கடந்த 19ந் தேதி நீதிபதி தள்ளி வைத்தார்.

இந்த வழக்கில் இன்று நீதிபதி நாகமுத்து தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பின் விவரம் வருமுõறு:
நளினி முன்கூட்டியே விடுதலைக் கோரி தாக்கல் செய்த மனுவை ஆலோசனை கமிட்டி சிறை விதிகளுக்கு உட்பட்டு பரிசீலிக்கவில்லை.

இந்த வழக்கில் நன்னடத்தை அதிகாரியானவர் நளினியை முன்வட்டியே விடுதலை செய்யலாம் என்று கூறியிருந்தும் ஆலோசனை கமிட்டி அதனை நிராகரித்ததற்கான காரணத்தை குறிப்பிடவில்லை.

அதனை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு நளினியை விடுதலை செய்ய முடியாது என்று உத்தரவிட்டது சரியானது அல்ல. எனவே அரசின் உத்தரவை ரத்து செய்கிறேன்.
ஆலோசனை கமிட்டி சிறை விதிகளுக்குட்பட்டு மீண்டும் ஒன்று கூடி நளினியின் கோரிக்கை மனு மீது முடிவு எடுக்க வேண்டும். அப்போது அனைத்து அம்சங்களும் ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.

பிறகு ஆலோசனை கமிட்டியின் பரிந்துரையின்பேரில் அரசு சட்டவிதிகளுக்குட்பட்டு நளினியை விடுதலை செய்வது குறித்தோ அல்லது மறுத்தோ முடிவெடுக்கலாம். மீண்டும் தண்டனை குறைப்பு செய்ய இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161வது பிரிவின்படி கவர்னருக்கு அதிகாரம் உள்ளது.

இந்த நளினியின் கோரிக்கை மீது முடிவெடுக்க மாநில அரசுக்கும் அதிகாரம் உள்ளது. இவ்விஷயத்தில் அரசும் கவர்னருக்கு பரிந்துரை செய்யலாம்.

இவ்வாறு நீதிபதி கூறினார்.

No comments: