தமிழ்நாட்டில் தொடருந்து மறியல் போராட்டம்: முன்னணி தலைவர்கள் உட்பட திராவிடர் கழகத்தினர் கைது



தமிழ்நாட்டில் உள்ள திராவிடர் கழகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த தொடருந்து மறியல் போராட்டம் தமிழ்நாடு காவல்துறையால் தடைசெய்யப்பட்டு போராட்டத்தில் கலந்துகொள்ள அணிதிரண்டோர் அனைவரும் கைது செய்யப்பட்டதால் இன்று சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே அறிவித்திருந்தபடி இன்று செவ்வாய்க்கிழமை காலையிலிருந்தே தொடருந்து மறியல் போராட்டத்தில் பங்கேற்க தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் திராவிடர் கழகத்தினர் சென்னை - வேப்பேரியில் அமைந்துள்ள பெரியார் திடலில் குவிந்தனர்.

இவர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பினர் போன்ற அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க வந்திருந்தனர்.



பெரியார் திடலிலிருந்து திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தலைமையில் போராட்டத்தில் பங்கேற்க வந்தோர் அணிவகுத்து, ஈ.வெ.கி.சம்பத் வீதி வழியாக உரிமை முழக்கமிட்டுச் சென்றனர். அவர்களை வழிமறித்த காவல்துறையினர் கைது செய்தனர்.

கி.வீரமணி, தொல். திருமாவளவன், பாவலர் அறிவுமதி, இயக்குநர் சீமான், அன்பு தென்னரசன், பேராசிரியர் தெய்வநாயகம், வா.மு. சேதுராமன் ஆகியோர் கைது செய்யப்பட்டதுடன் தொடர்ந்து அணி அணியாக போராட்டத்தில் ஈடுபட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்ட்டோரில் திராவிடர் கழக பொருளாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசு, செயலவைத் தலைவர் இராஜகிரி கோ.தங்கராசு, திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர்களான துரை. சந்திரசேகரன், இரா. குணசேகரன், டொக்டர் பிறைநுதல் செல்வி, மாநில இளைஞர் அணி அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன், மாநில மாணவர் அணி அமைப்பாளர்கள் கா.எழிலரசன், றஞ்சித்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் க.திருமகள், மாநில மகளிர் அணி அமைப்பாளர் தஞ்சை கலைச்செல்வி, மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் கலைவாணி ஆகியோரும் அடங்குவர்.



காவல்துறை கொண்டு வந்த வாகனங்கள் போதாமையால் திருப்பித் திருப்பி வாகனங்களைக் கொண்டு வந்து ஏற்றிச் செல்லப்பட்டவர்கள் கண்ணப்பர் திடலில் ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். மண்டபம் கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டோர் நிரம்பி வழிந்தனர்.

போராட்டம் தொடங்குவதற்கு முன்னர் பெரியார் திடலுக்கு வெளியே அமைக்கப்பட்ட பந்தலில் சிறைக்குச் செல்லக் கூடியிருந்த போராட்டத்தில் ஈடுபட்டோர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஏன் இந்த ஆர்ப்பாட்டம்? என்பதை விளக்கித் தலைவர்கள் உரையாற்றினர்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

தமிழ்நாட்டிலிருந்து 30 கல் தொலைவில் உள்ள இலங்கையில் தமிழர்கள் மீது குண்டுமழை பொழிந்து அங்குள்ள தமிழர்களை அழிக்கின்றனர். அவர்களின் வாழ்வுரிமையை அழிக்கின்றனர்.

பொதுமக்கள் என்று சொல்லக்கூடிய அப்பாவி மக்கள் காடுகளில் ஓடி ஒளிந்தாலும் அங்கும் சிங்கள இராணுவப் படை குண்டுவீசி அழிக்கின்றது. இலங்கையில் நடைபெறுகின்ற இதுபோன்ற இனப் படுகொலை உலகில் வேறு எந்த நாட்டிலும் நடந்திருக்காது.

நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டு வருகின்றது. உலக சமாதான நாள், உலக ஒற்றுமை நாள் என்று பேசுகின்றார்களே தவிர, உலக அரங்கில் அதற்கு அர்த்தமற்ற சூழ்நிலைதான் விளங்குகின்றது.

சற்று நேரத்திற்கு முன்புகூட இலங்கையிலிருந்து வந்திருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், என்னைச் சந்தித்து இலங்கையில் எத்தகைய இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கின்றது என்பது தொடர்பில் கூறினார்.



இரண்டாவதாக, தமிழகத்திலிருந்து மீன் பிடிக்கச் செல்கின்ற தமிழக கடற்றொழிலாளர்களை சிங்கள கடற்படையினர் காக்கை, குருவியை சுட்டுத் தள்ளுவதைப்போல சுடுகின்றனர். இது அன்றாடம் நடந்து வருகின்ற ஒரு தொடர்கதை போன்ற செய்தியாகி விட்டது.

மூன்றாவதாக, ஒரிசா-கர்நாடகம் போன்ற பல மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டிருக்கின்றனர். கன்னியாஸ்திரிகள் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு இருக்கின்றனர். கிறிஸ்தவ தேவாலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன.

ஒரிசாவில் தொழு நோய் சிகிச்சை செய்ய வந்த அவுஸ்திரேலிய பாதிரியார் ஸ்டூ வர்ட்ஸ் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது பிள்ளைகள் இருவர் உள்பட பஜ்ரங் தளத்தினரால் ஜீப்பில் வைத்து உயிரோடு கொளுத்தப்பட்டனர்.

மதச்சார்பற்ற அரசாக நடந்துகொள்ள வேண்டிய அரசு மதச்சார்பற்ற தன்மையைப் புரிந்துகொள்ளாமல், இன்னமும் மதக் கலவரத்தை நடத்திக்கொண்டு வரும் பஜ்ரங் தள் - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.

மத்திய அரசு - வன்முறையைத் தடுத்து நிறுத்த வேண்டும். வன்முறையை செய்பவர்களை தண்டிக்க வேண்டும். உடுக்கை இழந்தவன் கை போல உதவக் கூடியவர்கள் நாங்கள். தமிழர்களுக்கு ஒரு துன்பம் என்றால் சிறுபான்மையினருக்கு ஒரு துன்பம் என்றால், உடுக்கை இழந்தவன் கைபோல உதவக் கூடியவர்கள் நாங்கள்.

மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறிலங்கா அரசுக்கு எச்சரிக்கை செய்யவேண்டும்.

வாய்மூடி மெளனியாக இருக்கக் கூடாது என்பதற்காக எச்சரிக்கை செய்வதற்காகத்தான் இந்த தொடருந்து மறியல் போராட்டம். இது முதல் கட்டப் போராட்டம். இது தொடக்கம்தான்.

இந்த தொடருந்து மறியல் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருக்கின்றது. எனவே, கட்டுப்பாட்டுடன் நடந்து சிறைக்குச் செல்ல வேண்டும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்

நாம், நம்முடைய திராவிடர் கழக தலைவர், ஆசிரியர் அவர்களை வாழ்த்தி வழி அனுப்ப இங்கு வரவில்லை. அவரைப் பின்பற்றி அவர் வழி நடக்க இங்கு வந்திருக்கின்றோம். ஆசிரியர் அய்யா அவர்களோடு கைகோத்து களம் இறங்கி சிறை செல்ல வந்திருக்கின்றோம்.



பாவலர் அறிவுமதி

உலகத் தமிழர்களுக்கு ஒத்தடம் கொடுக்கக்கூடிய ஒரு அறப்போராட்டத்தை ஈழத் தமிழர்களுக்காகவும், இங்குள்ள தமிழர்களுக்காகவும் திராவிடர் கழகம் நடத்துகின்றது.

உலகத் தமிழர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் தமிழர்களுக்கு விடுதலை எப்போது என்பதுதான். உலகத் தமிழர்களுக்கு ஆறுதலாக நடக்கக் கூடிய இந்த தொடருந்து மறியல் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து பங்கேற்க வந்திருக்கின்றனர்.

தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்கின்றனர் என்பதை நம்முடைய ஆசிரியர் ஐயா இந்தப் போராட்டத்தின் மூலம் எடுத்துக்காட்டியிருக்கின்றார்.

இயக்குநர் சீமான்

இன்று ஒரு மகிழ்ச்சியான செய்தி. மான உணர்வு உள்ளவர்கள் திரண்டிருக்கின்றனர். ஆசியாவிலேயே மனித உரிமை மீறல்கள் இலங்கையில்தான் அதிகம் என்று ஆசிய மனித உரிமை அமைப்பு தெரிவித்திருக்கின்றது.

இரண்டு லட்சம் பேர் அகதிகளாக ஆக்கப்பட்டிருக்கின்றனர். மக்கள் பட்டினியால் சாகின்றனர். ஏ-9 என்ற நெடுஞ்சாலை வழிதடத்தையும் சிங்கள அரசு மூடிவிட்டது. தமிழர்களுக்குப் பொருட்கள் கிடைத்தபாடில்லை.

இதுவரை 6 ஆயிரம் முறை சிங்கள இராணுவம் தமிழர்கள் மீது குண்டு வீசி தாக்கியிருக்கின்றது. ஒரு குண்டு எடை ஆயிரம் கிலோ. ஒரு குண்டு வீசப்பட்டால் அது பூமியை பிளந்து தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் என்றால் நம் தமிழர்கள் தலையில் விழுந்தால் என்னாவது? இதுவரை தமிழ்நாட்டைச் சார்ந்த 305 கடற்றொழிலாளர்கள் சிங்கள கடற்படையினர் கொன்றிருக்கின்றனர்.

பேராயர் எஸ்றா சற்குணம்

திராவிடர் கழகம் தொடருந்து மறியல் போராட்டம் நடத்துகின்றது என்றால், நாங்கள் வழியனுப்பி வைக்காமல் வேறு யார் வழியனுப்பி வைப்பர்? இது வெள்ளைச்சட்டை மட்டுமல்ல, உள்ளே கறப்புச் சட்டையும் இருக்கின்றது.

ஒரிசா, இராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் 100 பேருக்கு மேல் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். 80 ஆயிரம் பேர் ஒரிசாவில் நாட்டைவிட்டு காடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் எல்லாம் அகதிகளாக வாழ்கின்றனர்.

பஜ்ரங்தளம் போன்ற அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல ஈழத் தமிழர்களும் கொல்லப்படுகின்றனர். இதற்கெல்லாம் முடிவு காண வேண்டும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில செயலாளர் எஸ்.ஏ. சையத் சத்தார்

சிறுபான்மையினர் மீது இந்துத்துவாவாதிகள் குறிவைத்துத் தாக்குகின்றனர். தமிழர்களை குறிவைத்து இனப்படுகொலை செய்கின்றனர். நாங்கள் உறங்குகின்றோம் அமைதியாக இருக்கின்றோம். எங்களை தட்டி எழுப்பி ஜனநாயகத்தை கெடுத்துவிடாதீர்கள்.

திராவிட ஆன்மீக பேரவையின் நெறியாளர் டொக்டர் தெய்வநாயகம்

இலங்கையில் நடப்பது இரண்டு இனங்களுக்கு இடையே நடைபெறுகின்ற இனப் போராட்டம். ஸ்மார்த்தர் என்ற பார்ப்பனர்களும் திராவிடர்களுக்கும் இடையே இனப் போராட்டம் நடந்துகொண்டிருக்கின்றது என்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஒரு இனப்படுகொலையை நடத்தி வருகின்றார். ஒட்டுமொத்த தமிழர்களையும் அழித்து விடலாம் என்று இராணுவத்தை ஏவியுள்ளார்.

சமீபத்தில் ஒரு கொடுமை தொடங்கியுள்ளது. தமிழ் மக்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ, அங்கெல்லாம் நச்சுப் புகையை வீசிக் கொல்ல காரியங்கள் நடைபெறுகின்றது.

சிறிலங்கா இராணுவத்தினர் முகமூடி அணிந்து நச்சுப் புகையை வீசுகின்றனர். கம்பள விரிப்புபோல நாள்தோறும் சிங்கள வான்படை தமிழ் மக்கள் மீது குண்டு வீசி அழித்து வருகின்றது.

தமிழீழம் மலர்வதை யாராலும் தடுத்து விடமுடியாது. திராவிடர் கழகத் தலைவர் நடத்துகின்ற இந்தப் போராட்டம் எங்களுக்கு மன உறுதியை அளித்திருக்கிறது. மனத் தெம்பை அளித்திருக்கின்றது.

புலம்பெயர்ந்த தமிழர்கள், உலக மக்கள் உங்களைப் பார்க்கின்றனர். உங்களைப் பாராட்டுகின்றனர். அனைத்துலக நாட்டிலும் தமிழீழக் கொடி பறந்தே தீரும் என்றார்.

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

எமது திராவிடர் கழக தலைவர் இங்கு வைத்துள்ள மூன்று கோரிக்கைகளும் முக்கியமானவை தமிழர்களிடையே ஒரு எழுச்சி ஏற்பட்டிருக்கின்றது. இதைப் பார்த்து மத்திய அரசு ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்றார்.

இறுதியாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிறைவுரையாற்றுகையில், "முதல் அத்தியாயம் தான் தற்போது தொடக்கப்பட்டிருக்கின்றது. தமிழர்களை பிரித்து ஆளலாம் என்று யாரும் தப்புக்கணக்கு போடாதீர்கள். தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர் என்பதை இந்த தொடருந்து மறியல் போராட்டம் அறிவித்துள்ளது. முடிவுரை இன்னும் எழுதப்படவில்லை என்றார்.

No comments: