தமிழர்களை மட்டும் இலக்கு வைத்து பொலிஸ் பதிவுகள் நடைபெறக்கூடாது - மனோ கணேசன்


மேல்மாகாணத்தில் தற்காலிகமாக வசிக்கும் தமிழர் மட்டும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் பொலிஸ் பதிவுகளில் தமக்கு உடன்பாடில்லை என மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்திலிருந்து வந்து கொழும்பிலே தற்காலிகமாக தங்கியிருக்கும் மக்களை நாளை பதிவு செய்துக்கொள்ளும்படி பொலிஸார் அறிவுறுத்தியுள்ளார்கள். இதேபோல் அண்மையில் வடமாகாணத்திலிருந்து கொழும்பு வந்த தமிழர்கள் பொலிஸ் பதிவுக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளர்ர்.

எதிர்வரும் நாட்களில் ஊவா மாகாண தமிழ் பேசும் மக்களையும் மேல் மாகாண பொலிஸார் பதிவு செய்ய உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த பொலிஸ் பதிவு நடவடிக்கை எதிர்காலத்தில் ஏனைய மாகாணங்களுக்கும் விஸ்தரிக்கப்படக் கூடும் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார். தனியாக தமிழ் மக்களை மட்டும் பொலிஸ் பதிவுக்கு உட்படுத்தப்படுவதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், கொழும்பின் பாதுகாப்பிற்காக பொலிஸார்; இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதனை கட்சி ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தப் பதிவு நடவடிக்களை ஏனைய அனைத்து இன சமூகங்களுக்கும் பொதுவான அமைய வேண்டும் என்பதே தமது முதன்மையான கோரிக்கை என மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறின்றி தனித்து தமிழ் மக்கள் மட்டும் பதிவு செய்யப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடிய நடைமுறையல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் அனைவரும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை எனவும், சில சிங்கள இனத்தவர்கள் அதுவும் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்களும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தமை சுட்டிக்காட்டப்பட வேண்டியதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பாதுகாப்பு கருதியே தமிழர்கள் பதிவுக்கு உட்படுத்தப்படுவதாக கூறப்படும் நியாயங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் தெரிவித்துள்ளார். நோயாளிகள், குழந்தைகள், குழந்தைகள் தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் இவ்வாறு ஒரு நாள் முழுவதும் பதிவுக்கு உட்படுத்தப்படுவதனால் பெரிதும் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: