கிளிநொச்சி நகரை நோக்கி சிறிலங்கா படையினர் அகோர எறிகணை வீச்சு - பெரும் தாக்குதலுக்கான முன்னோட்டம்


கிளிநொச்சி நகரத்தின் மீது சிறிலங்கா படையினர் நேற்று இரவு செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

கிளிநொச்சி நகரின் மத்திய பகுதி வரையான பகுதிகளில் செறிவாக நூற்றுக்கணக்கில் சிறிலங்கா இன்று வியாழக்கிழமை இரவு எறிகணைத்தாக்குதல் நடத்தினர்.

நூற்றுக்கணக்கில் ஆட்டிலெறி எறிகணைகளும் பல்குழல் வெடிகணைகளும் வீழ்ந்து வெடித்துள்ளன.
இதனால் பெருமளவில் மக்களின் வாழ்விடங்கள், வணிக நிலையங்கள் அழிந்தும் சேதமாகியும் உள்ளன.

கிளிநொச்சி மருத்துவமனையைச் சூழவும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.

இந்த எறிகணை தாக்குதலினால் கிளிநொச்சி நகரம் மூன்று மணிநேரம் அதிர்ந்தது.

இத்தாக்குதல்களில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான பாலசிங்கம்- பவுணன் என்பவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா படையினர் நாளை பெரும் தாக்குதலினை தொடுக்கும் வகையில் முன்னோட்டமாக இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

No comments: