வன்னியில் உக்கிரமுறும் வான் தாக்குதல்கள் - உதயன் ஆசிரியர் தலையங்கம்.



விடுதலைப் புலிகளுக்கு எதிரான அவர்களை ஒழித்துக்கட்டும் போர் முடிவுக்கு வந்துகொண்டிருப்பதாக அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது சகோதரரான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட அரச தரப்பின் உயர்மட்டப் பிரமுகர்கள் பலரும் கடந்த சில நாள்களாக ஆரூடம் ஒன்றைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
விடுதலைப் புலிகளின் கேந்திர மையமான அவர்களின் அரச நிர்வாகக் கட்டமைப்புகள் அமைந்துள்ள கிளிநொச்சி நகர் மீது, படைநகர்வு பெரிய அளவில் தொடங்கப்பட உள்ளதாக அவர்கள் அடிக்கடி அறிவித்து வந்தார்கள்.
கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கு இன்னும் சிறிது தூரமே உள்ளது. எமது படையினர் கிளிநொச்சியின் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். எந்த வேளையிலும் படையினர் உள்ளே செல்லலாம். அடுத்த வாரத்தில் கிளிநொச்சியில் கடும் சண்டை மூளும். இவ்வாறு ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான போர்ப் பேரிகைகளை முழங்கிக் கொண்டிருந்தனர்.
இவற்றுக்கிடையில் இந்த வாரத்தில் கடுமையான தாக்குதல்கள் கிளிநொச்சியை அண்டி நடைபெறப்போவதாக பாதுகாப்பு விமர்சகர்களும் ஆரூடம் கூறியிருந்தனர்.
அந்தவாறே கிளிநொச்சியில் அரசு பெரும் தாக்குதலைத் தொடங்கி விட்டதாகக் கருதலாம். விடுதலைப் புலிகளின் முகாம்களையும் முக்கிய தளங்களையும் விமானக் குண்டுவீச்சு மூலம் அழித்து வருவதாக அரசாங்கத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆனால் கடந்த சில நாள்களாக கிளிநொச்சியில் விமானத் தாக்குதல்களால் மரணமுறுவோரும் காயப்படுவோரும் பொதுமக்களாகவே இருக்கின்றனர்.
விமானக் குண்டு வீச்சுகளில் பொதுமக்களின் வீடுகளும், ஆலயங்களுமே அழிவதாக சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவை மட்டுமன்றி சர்வதேசத் தொண்டர் அமைப்புகளின் அலுவலகங்களுக்கு சிறிது தொலைவிலும் வைத்தியசாலை போன்ற மனிதாபிமான, மனிதநேயப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்குச் சற்றுத் தொலைவிலும் குண்டுகளும், குண்டுச் சிதறல்களும் விழுகின்றன.
கிளிநொச்சியில் ஏ9 வீதியில், 55ஆம் கட்டையில் உள்ள செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் அலுவலகத்திற்குச் சற்றுத் தொலைவில் குண்டு விழுந்திருக்கின்றது. கிளிநொச்சி அரசினர் ஆஸ்பத்திரிக்கு சற்றுத் தொலைவில் போடப்பட்ட குண்டுக ளின் சிதறல்கள் ஆஸ்பத்திரியின் யன்னல் கண்ணாடிகளை நொறுக்கியுள்ளன.
இத்தனைக்கும் மேற்படி இரண்டு நிறுவனங்களும் தாம் மனிதநேயப் பணியை மேற்கொள்ளும் நிறுவனங்கள் என்பதனைத் துலாம்பரமாக தெளிவாக தெரியக்கூடியதாக கட்டடக் கூரைகளில் தமது குறிகளை இட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
போர் வேளைகளில் மேற்படி நிறுவனங்கள் தாக்கப்படக் கூடாது, விமானத் தாக்குதல் நடத்தப்படக் கூடாது என்பதற்கான குறியீடுகளே அவை. இது சர்வதேச விதிமுறையுமாகும்.
இவற்றின் மீது தாக்குதல் நடத்துவது எமது நோக்கமல்ல; வேறு இடத்தைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் அவை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுவதும் எந்த வகையிலும் பொருந்தாது.
போரால் மக்களோ, மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களோ எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை அதில் ஈடுபடும் இரண்டு தரப்புகளும் கவனத்தில் எடுத்து நிதானமாகச் செயற்படுவது அவசியம்; உறுதிப்படுத்துவது பிரதான தேவையாகும்.
அதுவும், விமானத் தாக்குதல் நடத்த உத்தேசித்துள்ள அமைவிடங்கள் வரைபடங்கள் துல்லியமாகக் கண்டறியப்பட்டே அவை நடத்தப்படுவதாக அரசு கூறுவது வழமையான வாய்ப்பாடு. அவ்வாறிருக்க தாம் இலக்கு வைத்து குறிபார்த்து தாக்குதல் நடத்தும் இடங்களை நுட்பமாக இனங்கண்டு தாக்கும் நவீன வசதிகள் இலங்கை விமானப் படையிடம் இல்லாதிருக்க முடியாது.
ஆகையால், விமானப்படையின் தாக்குதல்களால் பொதுமக்களின் வாழ்விடங்களும், பொது இடங்களும் வைத்தியசேவை போன்ற அத்தியாவசிய மற்றும் மனிதாபிமான சேவைகளில் ஈடுபடும் நிறுவனங்களும் சேவைகளும் பாதிப்புறுவதை அல்லது தடைப்படுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
செஞ்சிலுவை, உலக உணவு நிறுவனம், வைத்தியசாலை போன்ற இடங்கள் விமானக் குண்டு வீச்சால் பாதிப்படைவது, அவற்றின் சேவைகளை தடைபண்ணும் நோக்குடன் விடுக்கப்படும் எச்சரிக்கையா? இத்தகைய சந்தேகம் எழுவதை அரசு தடுக்க இயலாது; மழுப்பவும் முடியாது.

No comments: