இனவாதத்தை கக்கும் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா..இலங்கை சிங்களவர்களுக்கே உரியதாம்.

தமிழ் சிறுபான்மையினரினால் நாடு துண்டாடப்படுவதற்கு சிங்கள மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மக்கள் நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கைகளை முன்வைக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கப் படையினர் முன்னெடுக்கும் யுத்தம் ஒரு வருடத்திற்குள் முடிவடையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவிலிருந்து வெளியாகும் தி நெசனல் போஸ்ட் என்ற ஊடகத்திற்கு அளித்த விசேட செவ்வியின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இந்த நாடு சிங்களவர்களுக்கே உரிமையானது என்பதில் சந்தேகம் இல்லை எனவும், சிறுபான்மை மக்களையும் இந்த மண்ணின் மைந்தர்களாகவே நடத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் 75 வீதமான சிங்களப் பெரும்பான்மை மக்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர்களது உரிமைகளை விட்டுக் கொடுக்கும் வகையில் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த நடவடிக்கைகளின் போது சிவிலியன்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது எனவும், மிகவும் குறைந்தளவு சிவிலியன்களே யுத்தத்தின் போது உயிரிழந்துள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமைக் குழுக்கள் குரல் கொடுப்பது போன்று படையினர் மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் கடுமையான ஆளணித் தட்டுப்பாட்டுக்கு உள்ளாகியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் 8000 விடுதலைப் புலி உறுப்பினர்களும், கிழக்கில் 2000 உறுப்பினர்களும், விமானபடைத் தாக்குதல்களின் மூலம் 1000 உறுப்பினர்களும் கொல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ வட்டாரத் தகவல்களுக்கு அமைய மேலும் 4000 தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளே எஞ்சியிருப்பதாகவும், சுமார் 250,000 அரச படையினரும் பாரியளவிலான ஆயுதங்களும் கைவசம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் காட்டுப் பகுதிகளில் புதைக்கப் பட்டிருக்கும் கண்ணி வெடிகளை முற்றாக அகற்றுவதற்கு இன்னமும் 20 ஆண்டுகள் தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பூரணமாக நாடு விடுதலைப் பெறும் வரையில் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட மாட்டாது என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் நான்காவது ஈழப்போர் பற்றி அதீதமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சி அடுத்த வாரமளவில் கைப்பற்றப்படும் என இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

No comments: