காங்கிரஸ் மீது சீமான் கடும் தாக்கு

இலங்கையில் தமிழர்களைப் பாதுகாப்பதற்காக தனது இயக்கத்தின் 21,000 பேரை பலிகொடுத்த விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல. அவர்கள் மீதான தடையை இந்திய அரசு உடனே நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இயக்குனர் சீமான்.

இலங்கையில் தமிழர் படுகொலையை கண்டித்து ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய போராட்டத்தில் டைரக்டர்கள் சீமான், அமீர் ஆகியோர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கண்டனம் தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்து சீமான் அளித்துள்ள ஒரு பேட்டியில்,

விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கமா என்று கருத்து கணிப்பு நடத்தப்பட்டுஉள்ளது. 86 சதவீதம் மக்கள் அவர்களை தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறியுள்ளனர்.

ஆட்சியையே மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள். புலிகளின் இயக்கம் எப்படிப்பட்டதென அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தீர்மானிக்கக் கூடாது. அதை மக்கள் சொல்வார்கள்.

ஒரு இனத்தை அழித்து ஒழிக்கும் அரசு பயங்கரவாத அரசா... அவல்லது அப்படிப்பட்டவர்களிடமிருந்து மக்களைப் பாதுகாப்பவர்கள் தீவிரவாதிகளா?

விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல, தேவையில்லாமல் இந்தியாவில் தடை செய்துள்ளனர் என்கிறார் பால்தாக்கரே. அவர் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவித்தார் என்று உங்களால் கண்டிக்க முடியுமா? முடியாது, காரணம் அவரைச் சீண்டினால் மராட்டியம் மண்மேடு ஆகிவிடும்.

தமிழர்கள் இளிச்சவாயர்கள். அதனால் வாயிலும் வயிற்றிலும் குத்துகிறீர்கள்.

தமிழக மீனவர்கள் 400 பேரை நடுக்கடலில் சுட்டு வீழ்த்தி நாட்டையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது சிங்கள அரசு. அதை கண்டிக்க துப்பில்லை. நானும் அமீரும் பேசியதில் நாடு சுக்குநூறாகி விட்டதா?.

அழிக்கப்படும் தமிழ் இனத்தை காப்பாற்றும் மனித நேயப்பண்பு இல்லாமல் கீழ்த்தரமான அரசியல் நடத்துகின்றனர் இங்கே.

தமிழ் மக்கள் செத்து விழுகிறார்கள். அவர்களுக்காக கண்ணீர் சிந்துவது தப்பா? தமிழன் என்பதை விடுங்கள்... ஒரு சக மனிதன் செத்தால் வருந்த மாட்டீர்களா? தமிழ் மீனவன் கடலில் செத்து விழுகிறான். பேரியக்கம் என்று கூறிக் கொள்பவர்கள் (காஙகிரஸ்) ஏன் கண்டிக்கவில்லை?.

நம்மிடமிருந்து ரேடார் வாங்கிக் கொண்டு, ஆயுதங்கள் வாங்கிக் கொண்டு ராணுவ பயிற்சி எடுத்துக் கொண்டு நம் இனத்தைச் சேர்ந்த மீனவரை ஒருவன் சுட்டுத் தள்ளுகிறான். அவனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறீர்களே இதை விட கொடுமை என்ன இருக்கிறது?

மீனவர்கள் சுடப்படுவது கண்டிக்கத்தக்கது என்றாவது நீங்கள் பேசியது உண்டா? பெரியார், மார்க்சியா, அம்பேத்காரின் புதல்வர்கள் நாங்கள். சொந்த இனம் அழிவதைப் பார்த்து பேசாமல் மெளனமாக இருக்க முடியவில்லை.

உலகில் எந்த தீவிரவாத இயக்கத்திலும் 21,000 பேர் உயிர் நீத்த சம்பவம் நடக்கவில்லை. அவர்கள் தீவிரவாத இயக்கம் அல்ல. மக்கள் விடுதலைக்காக போராடும் போராளிகள்.

பொறுத்திருப்போம்... எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்.

நெல்சன் மண்டேலாவைக் கூட தீவிரவாத பட்டியலில்தான் வைத்திருந்தனர். சுபாஷ் சந்திர போஸ் பெயரையே அந்தப் பட்டியலில் இருந்து இப்போதுதான் நீக்கியுள்ளனர்.

எனவே தயவு செய்து புலிகள் மீதான தடையை நீக்குங்கள் என்று கெஞ்சுகிறோம். நாங்கள் எங்கள் எழவுக்காக அழுகிறோம். நீங்களோ எங்கள் பிணத்தின் மேல் ஏறி நின்று பிரசாரம் செய்கிறீர்கள் என்று கூறியுள்ளார் சீமான்.

No comments: