ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து தமிழ்நாடு அனைத்திலும் இன்று வியாழக்கிழமை தொடரூந்து மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மத்திய தொடரூந்து நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்திய தொல்.திருமாவளவன் உட்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த போராட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகானும் கலந்து கொண்டார்.
மத்திய தொடரூந்து நிலையத்திற்குள் திருமாவளவனை நுழையாது தடுப்பதற்கு காவல்துறையினர் அரண் அமைத்து நின்ற போதிலும், அந்த தடையையும் உடைத்து மறியல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும், இந்திய மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்ப்பட்டது.
இந்த மறியல் போராட்டத்தினால் டெல்லியில் இருந்து சென்னை சென்றுகொண்டிருந்த தமிழ்நாடு விரைவு தொடரூந்து, சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார தொடரூந்து 5 தொடரூந்துகள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டன.
சென்னை மத்திக்கு செல்ல வேண்டிய 12 தொடரூந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இந்த மறியல் போராட்டத்தினால் தொடரூந்து போக்குவரத்தில் பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.
இதேவேளை, திருச்சி தொடரூந்து நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதன்போது பேசிய மாநில பேச்சாளர் தமிழரசன், ''ஈழத் தமிழர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தி வரும் சிறிலங்கா படைகளுக்கு இந்திய அரசு எந்தவிதமான உதவியும் செய்யக் கூடாது என்றும், சிறிலங்காவில் நடந்து வரும் போரை இந்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கூறினார்.
இதேபோன்று திருச்சி மாவட்டம் லால்குடி, ஜெயபுரம், மணப்பாறை ஆகிய தொடரூந்து நிலையங்களில் மறியல் செய்த நூற்றுக்கணக்கான விடுதலை சிறுத்தையினர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை தொடரூந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் அப்துல் நாசர் தலைமையில் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதேபோன்று தமிழ்நாடு அனைத்திலும் கடைபெற்ற தொடரூந்து மறியல் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆயிரக்கனக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment