இரந்து பெறும் பிச்சை வேறு இணக்கப் பேச்சுத் தீர்வு வேறு

இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வே சாத்தியம் என்று மீண்டும் வெளியுலகுக்குப் பம்மாத்துக் காட்டுவது போல அறிவிப்பு விடுத்திருக்கின்றார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உணர்வெழுச்சி தமிழகத்தில் மீண்டும் பீறிட்டுக் கிளம்பியுள்ள பின்னணியில் - அதன் காரணமாகப் புதுடில்லி அரசிடமிருந்து வந்திருக்கும் புதிய அழுத்தத்தைச் சமாளிக்கும் நோக்கில் - இதுவரை காலமும் செயற்றிறன் இன்றித் தூங்கிக் கிடந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தை, மீண்டும்தட்டி எழுப்பி,
சர்வதேசத்துக்குக் கண்கட்டுவித்தை நாடகம் ஒன்றை திரும்பவும் நடத்திக் காட்டுவதற்காக ஒருதடவை கூட்டி முடித்திருக்கிறார் அவர்.
அந்தக் கூட்டத்திலேயே இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வே சாத்தியம் என்று - ‘சாத்தான் வேதம் ஓதுவது போல’ - நியாயம் பிளந்திருக்கின்றார் அவர். அதற்காகவே சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெறுகின்றது என்று விளக்கம் வேறு அவர் அளித்திருக்கின்றார்.தமிழரின் உரிமைக்காகப் புலிகள் நடத்தும் போராட்டத்தை, வழமையான ஏனைய சிங்களத் தலைவர்களைப்போல ‘பயங்கரவாதம்’ என்று சித்திரித்துள்ள அவர், அதனை இராணுவ நடவடிக்கை மூலம் அடக்கி, பேச்சு மூலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்போகிறார் எனவும் சூளுரைத்திருக்கின்றார்.வேறு வழியின்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தயவிலும், தாட்சண்யத்திலும் அவரது அரசில் ஒட்டிக்கொண்டு அரசியல் பிழைப்பு நடத்திவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போன்றவற்றைக் கூட்டி வைத்துக்கொண்டு பேச்சு நடத்துவாராம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அவர்களின் இணக்கத்துடன் ஈழத் தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யும் அரசியல் தீர்வை அவர் பெற்றுத்தருவாராம். அதை ஈழத் தமிழ் மக்களும், புலம் பெயர்வாழ் தமிழர்களும், சர்வதேசமும் நம்ப வேண்டுமாம்.- இவைதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்போது வெளியிட்டு வரும் கருத்துகளில் தொக்கி நிற்கும் அர்த்தங்களாகும்.நாடாளுமன்றில் ஈழத் தமிழர்களைப் பெருமளவில் - ஏன் 95 வீதம் என்று கூறலாம் - பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்த சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பே இல்லை.கலந்துகொண்ட ஈ. பி. டி. பிக்கோ, கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கோ அரசின் தயவில் தங்கி நிற்பதைத் தவிர மாற்று மார்க்கமே இல்லை. அரசுத் தரப்பு எடுக்கும் தீர்மானங்களுக்கு ‘ஜால்ரா’ போடுவதை விட, அதற்கு அப்பால் ஈழத் தமிழருக்கு நியாயம் வேண்டிப் பேரம் பேசும் ஆற்றல் எதுவுமே அவற்றுக்கு இல்லை என்பது வெளிப்படையான அம்சம்ஆயுதப் பலம் கொண்ட வகையிலும், மக்கள் ஆதரவுப் பலம் மிக்க வகையிலும், இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் எழுப்பிப் பேரம் பேசும் வலு விடுதலைப் புலிகளிடம்தான் உள்ளது. அத்தகைய புலிகளை அழித்து, ஒழித்து, அடக்கிவிட்டுத்தான் மறுவேலை என்று கர்ஜித்து, போர் வெறிகொண்டு தீவிரம் பிடித்து அலைகின்றன இலங்கைப் படைகள். மறுபக்கத்தில், ஈழத் தமிழ் மக்களின் பேராதரவு பெற்ற - நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கொண்ட - தமிழ்க் கூட்டமைப்பைப் புறக்கணித்துவிட்டு சமாதானத் தீர்வு நாடகம் ஆடுகிறது கொழும்பு.ஆக, புலிகளை ஒழித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒதுக்கி, தமிழர் தரப்பின் பேரம் பேசும் வலுவை சிதைத்து விட்டு -அரசின் காலடியில் விழுந்து கிடக்கும் ஈ.பி.டி.பி., கருணா குழு, சங்கரி அணி, சித்தர் கட்சி போன்றவற்றோடு பேசி, இலங்கை இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக் காணப் போகின்றதாம் மஹிந்தரின் அரசுத் தலைமை.ஈழத் தமிழர்களுக்காகப் பேச வேண்டிய உண்மையான - அதிகாரபூர்வமான - மக்கள் ஆதரவு பெற்ற தரப்புகளையும், கட்சிகளையும் ஒழித்து அல்லது ஒதுக்கித் தள்ளிவிட்டு - வேறு மார்க்கம் ஏதுமின்றித் தன் காலில் சரணாகதி அடைந்து விழுந்துகிடக்கும் ஒட்டுக் குழுக்கள், கூட்டுக் கட்சிகளை முன்னிறுத்தி -‘அமைதிப் பேச்சு’, ‘சமாதானத் தீர்வு’ என்றெல்லாம் கபட வேடம் போடுகிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.காலில் விழுந்து கிடப்போருடன் பேசுவது இணக்கத்துக்கான கலந்துரையாடல் அல்ல. அது அதிகார பீடம் போடும் பிச்சையை யாசகமாகப் பெறும் - இரந்துண்ணும் - கேவலம்தான்.அதைத்தான் அமைதித் தீர்வுக்கான சமாதான முயற்சி என்று காட்டப்பார்க்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.சிங்கள அதிகார வர்க்கத்திடம் வெறும் நாடாளுமன்றக் கதிரை களின் பலத்தை மட்டும் வைத்துக்கொண்டு சுமார் மூன்றரை தசாப்த காலம் பேச்சு நடத்தி, நம்பி ஏமாந்து, மோசம் போன பின்னர்தானே, பேச்சுக்கான பேரம் பேசும் வலுவையும் பெற்றுக்கொண்டு மேல் நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்து, ஆயுதம் தூக்கினார்கள் தமிழர்கள்.......!அதை மறந்து - மறைத்து - இப்போது கதை விடுகிறது சிங்களத் தலைமை. அதற்குத் துணை போய் - வழமைபோல - துரோகமிழைக்கின்றன சில தமிழர் தரப்புகள்.

No comments: