ஈழத் தமிழருக்காகப் போராட முதல்வர் முன்வந்தால் படைதிரட்டிக் களமிறக்குவேன் - சரத்குமார்


ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் சுமுகத்தீர்வு காண்பதற்குத தமிழக அரசியல் கட்சிகள் தனித்தனியாகப் போராடுவது பயனற்றது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

இலங்கையில் நமது தொப்புள்கொடி உறவுகளைக் காப்பாற்ற தமிழக முதலமைச்சர் தனது அதிகார ஆசைகளை தவிர்த்தும் அவற்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டும் தமிழ் இனம் வாழ களம் இறங்கிப் போராட முன்வந்தால் அதற்கு சமத்துவ மக்கள் கட்சி துணை நிற்கும். அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவையும் திரட்டிக் களம் இறங்குவேன் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து R. சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பவை வருமாறு.

தமிழினப் போராளிகளை வேரறுப்போம் என்று சூளுரைத்து இலங்கை இராணுவம் நடத்தும் இராணுவத் தாக்குதல்களால் அங்கு வாழுகின்ற ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தையே கருவறுக்க முயலும் படுபாதகச் செயலுக்கு மறைமுக இந்திய அரசும் துணை போகிறதோ என்ற வெகுநாளைய சந்தேகம் இந்திய இராணுவ அதிகாரிகள் இருவர் புலிகளின் தாக்குதலில் படுகாயமுற்ற சமீபத்திய நிகழ்வால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இலங்கையின் உள் விவகாரங்களில் இராணுவத்தின் அழித்தொழிப்பு நடவடிக்கைக்கு இந்திய அரசு இரகசியமாக உதவி வருவது வெட்ட வெளிச்சமாகி விட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தனித்தனி அணிகளாகப் போராடுவது பயனற்றது என்பதே எங்கள் கட்சியின் கருத்து.

கடந்த 19.12.2006 அன்று தமிழக முதலமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்திலேயே "ஈழப்பிரச்சினையின் தன்மையைப் புரிந்துகொண்டு உள்ளார்ந்த உணர்வோடு இனப்பிரச்சினையின் தன்மையை தீர்த்திட குழுவொன்றை அமைக்க வேண்டும். அக்குழு இலங்கை சென்று இலங்கை அரசோடும் தமிழ் இனப் போராட்ட அமைப்புகளோடும் பேச்சு நடத்துவதற்கு இந்திய அரசின் அனுமதியைத் தமிழக முதலமைச்சர் பெற வேண்டும். மேலும் அக்குழுவில் நானும் பங்கேற்பதற்காகத் தயாராகவே உள்ளேன்" என்பதையும் தெரிவித்தேன்.

உடனடியாக தமிழக முதலமைச்சர் மத்திய அரசை நிர்ப்பந்தித்து இலங்கையில் நடைபெற்றுவரும் இராணுவத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்திடவும், திறந்த மனதோடு சுமுக பேச்சுக்களை இந்திய அரசே முன்னின்று தொடங்கிடவும் இலங்கை அரசைக் கடுமையாக வலியுறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

No comments: