ஐ.நா சபை முன்பு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.


சுவிற்சர்லாந்து ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் பாரிய கவனயீர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


சுவிஸ் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் சுவிற்சர்லாந்தின் அனைத்து பாகங்களில் இருந்தும் தமிழ் மக்கள் கலந்துகொண்டதுடன், ஏனைய சில நாடுகளில் இருந்தும் ஒருசில மக்கள் கலந்துகொண்டனர்.


கவனயீர்ப்பு நடவடிக்கை நடைபெற்ற ஏக காலத்தில், வன்னி மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் மனு, ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியின் செயலரிடம் கையளிக்கப்பட்டது.


குறுகிய நாட்களில் ஒழுங்கு செய்யப்பட்ட கவனயீர்ப்பு நடவடிக்கையில் 1,500இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதுடன், அவர்கள் தமது உறவுகளின் நிலை தொடர்பாக ஐரோப்பிய தொலைக்காட்சியுடன் தமது கருத்துக்களைப் பகிந்து கொண்டனர்.


அத்துடன், தமிழ் மக்கள் மனித அவலத்திற்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலக நாடுகள் மெளனமாக இருப்பதாகவும் இதில் கலந்துகொண்ட மக்கள் கவலை தெரிவித்தனர்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 9வது கூட்டத்தொடர் தற்பொழுது நடைபெற்று வருவதால், இன்றைய கவனயீர்ப்பு நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகின்றது.


இன்றைய நிகழ்வில் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச்செயலர் கிருபாகரன், சுவிஸ் தமிழர் பேரவையின் துணைத்தலைவர் சண் தவராஜா, செயலர் நமசிவாயம், பிரித்தானிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பத்மநாதன், இராமலிங்கம் உட்பட பலர் உரையாற்றியிருந்தனர்.



மேலும் படங்களை பார்வையிட....
http://www.swissmurasam.info/images/stories/programe/24-09-08Geneva_1/album/ 

No comments: