பக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிருக்கலாமா?:ஈழத்தமிழருக்காக நடிகர் சத்யராஜ் ஆவேசம்


கவிஞர் பா.விஜய் நாயகனாக நடிக்கும் ‘ஞாபகங்கள்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் இன்று மாலை நடந்தது. நடிகர் சத்யராஜ், இவ்விழாவிற்கு வந்ததுமே அனைவரின் கவனமும் அவர் மீது தான் இருந்தது. அதற்கு காரணம், அவர் அணிந்திருந்த கருப்பு டீ-சர்ட்டில் ‘ஈழத்திற்காக குரல் கொடுப்போம்’ என்று ஆங்கில வாசகம் அச்சிடப்பட்டிருந்ததுதான்.

சத்யராஜ் பேசும் போதும் அனைவரின் கவனமும் அவர் மீதுதான் இருந்தது.

‘’நான் இந்த மேடையை ஒரு நல்ல விசயத்திற்காக பயன்படுத்திக்கொள்கிறேன். ஈழ விசயத்திற்காகத்தான் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

தேர்தலுக்காக யார் வேண்டுமானாலும் யாருடனாவது கூட்டணி வைத்துக்கொள்ளட்டும். ஆனால், ஈழத்தமிழர்கள் விசயத்தில் ஒன்றுபடட்டும். ஒருமித்த குரல் எழுப்ப வேண்டுகிறேன்.

வெளிநாடுகளில் எத்தனை தமிழர்கள் இருக்கிறார்களோ அத்துனை தமிழர்களும் ஈழ ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.

ஆனால் தாய் தமிழகத்தில் எத்துனை தமிழர்கள் கலந்துகொள்கிறார்கள். இதுதான் வேதனை. ஈழத்தமிழர்களுக்காக அனைத்து தமிழர்களும் குரல் கொடுக்க முன்வரவில்லை.

பக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிருக்கலாமா? நம் சொந்தங்கள் செத்து மடியும் போது குரல் கொடுக்கக் கூட யோசித்துக்கொண்டிருக்கலாமா?’’ என்று ஆவேசப்பட்டார்.

No comments: