பாதுகாப்பு வலயம் மீது படையினரின் தாக்குதலில் இன்று (வெள்ளி) 102 பொதுமக்கள் படுகொலை; 156 க்கு மேற்பட்டோர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில் 102 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 156-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

பாதுகாப்பு வலய' பகுதிகளான வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை பகுதிகளில் சிறிலங்கா படையினர் இன்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் இரவு வரை ஆட்லறி எறிகணை, பல்குழல் பீரங்கி, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை அகோரமாக நடத்தினர்.

இத்தாக்குதல்களில் 102 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 156-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

மேற்படி பகுதிகளில் உள்ள மூன்று மருத்துவ சிகிச்சை நிலையங்களில் காயமடைந்த மக்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகின்றது. அத்துடன், திலீபன் மருத்துவ சேவைப்பிரிவினரும் காயமடைந்த மக்களுக்கு சிகிச்சை வழங்கினர்.

இதேவேளையில் முள்ளிவாய்க்கால் பகுதி இடம்பெயர்ந்த மக்கள் வாழ்விடங்கள் மீதும் சிறிலங்கா படையினர் இன்று செறிவான எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர்.

அதேவேளையில் மாத்தளன் பகுதி மீதும் சிறிலங்கா படையினர் செறிவான துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களையும் நடத்தினர். இத்தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதேவேளை பாதுகாப்பு வலயப் பகுதிகளில் காயமடைந்த பொதுமக்களில் ஒரு தொகுதி நோயாளர்களையும், அவர்களின் பராமரிப்பாளர்களையும் ஏற்றிக்கொண்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் கப்பலான கிறீன் ஓசன் கப்பல் புல்மோட்டைக்கு புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ புதினம் ]

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in